Friday, May 14, 2010

சிம்மம் ஊதிய குழல்


ண்ணன் குழலூதும் இனிமையை, அவனுடன் கானகம் செல்லும் நண்பர்கள் (நண்பிகளும் தான்) சொல்லக் கேட்கிறாள் யசோதை. தானும் கேட்டு மகிழ்ந்ததைப் போல், 'நாவலம் (3-6)' என்ற திருமொழியை இயற்றியுள்ளாள்!

5-ம் பாசுரத்தில், நரசிம்மரைக் குழலூதச் செய்கின்றாள்!

***
 
முன் நரசிங்கமதாகி அவுணன் 
முக்கியத்தை முடிப்பான்* மூவுலகில்
மன்னரஞ்ச(சும்)* மதுசூதனன் வாயில் 
குழலின் ஓசை* செவியைப் பற்றி வாங்க*
நன் நரம்புடைய தும்புருவோடு*
நாரதனும் தம் தம் வீணை மறந்து*
கின்னர மிதுனங்களும் தம் தம்
கின்னரம்* தொடுகிலோம் என்றனரே.
நாவலம் 3-6-5

முன்பு நரசிங்க வடிவமாகி, இரணியனது பெருமையை அழித்தான்; மூவுலகிலும் உள்ள மன்னர்கள் அஞ்சும்படி; மதுசூதனன் தனது வாயிலே வைத்து ஊதிய குழலின் ஓசை காதுகளைப் பற்றி இழுக்க, நல்ல வீணைகளை உடைய தும்புருவும், நாரதரும், வைத்திருக்கும் வீணையை மறந்தனர். கின்னரர்களும், 'எங்கள் கின்னரங்களை இனிமேல் தொடமாட்டோம்' என்கின்றனர்.

(முக்கியம் - பெருமை; நரம்பு - வீணை; கின்னர மிதுனம் - கின்னரத் தம்பதியர்)

யசோதை, 'முன்' என்கின்றாளே! வேறு வழியின்றி, விளக்கம் எழுதும் அடியேனும் கொஞ்சம் ’முன்பு’ செல்கின்றேன் .. ஹி... ஹி...

***
 
(சாபத்தினால், சென்ற பாசுரத்தில் விழ ஆரம்பித்த ஜய விஜயர்கள், அடுத்த நரசிம்மர் பாசுரம் வரை காத்திருந்தனர்; அது வந்தவுடன், எங்கு விழலாம் என்று இடம் தேட ...)



இடம்: ஜம்பூத்வீபம் (அட ... பூமி தாம்ப்பா)
காலம்: படைப்புக் காலம்

ஜயன்: விஜயா! பார்த்தா நல்ல இடமாகத் தெரியுது! நேரே பெரிய மனிதர்களாக விழுந்து விடலாம்!

விஜயன்: வேண்டாம்! இந்த இடம் ரொம்பப் பொல்லாததாம்! அப்படியே விழுந்தால் 'தாய், தந்தை பெயர் தெரியாதவர்கள்' என்ற பட்டம் வருமாம்!

ஜயன்: சரி! மற்றவர்களைப் போலவே குழந்தைகளாகப் பிறந்து விடலாம்!

ஜயன் (திடீரென்று ...): கீழே பார்! திருமணம் நடைபெறுகிறது! பெரிய மண்டபம் வேறு! சாப்பாடும் நடக்கின்றது!

(கீழே, தக்ஷப் பிரஜாபதியின் 13 பெண்களுக்கும், கச்யபப் பிரஜாபதிக்கும் திருமணம் நடந்து கொண்டிருக்கிறது!)

விஜயன்: வந்தவுடனே சாப்பாடா! வந்த வேலையைப் பார்!

ஜயன் (யோசித்து ...): இந்தத் தம்பதியரின் குழந்தைகளாகப் பிறந்தால் என்ன?

விஜயன்: நல்ல Idea!

ஜயன் (காலரைத் தூக்கி விட்டு): இதெல்லாம் நமக்குச் சகஜமப்பா!

(கீழே விழ ஆரம்பிக்கிறான்)

விஜயன்: கொஞ்சம் இரு!

ஜயன் (கடுப்புடன்): இப்போ என்ன?

விஜயன்: பார்த்து விழு! நாம் திதிக்குப் பிறந்ததாக விஷ்ணு புராணத்துல போட்டிருக்கு! தப்பா விழுந்தா பின்னால் பிரச்சனை வரும்! வரத்தையும் மறந்து விடாதே! பிறவியில் இருந்தே தேவர்களுக்கும், நாராயணனுக்கும் விரோதிகள் நாம்! அப்பதான் வந்த வேலை சீக்கிரம் முடியும்!

(பூமியில் 'Entry' ஆகின்றனர் இருவரும் - கச்யபருக்கும், தக்ஷனின் இரண்டாம் புதல்வியான திதிக்கும், இரணியகசிபு, இரணியாட்சன் எனும் இரு அசுரர்களாக!)

***

'ரசிங்கமதாகி' என்கிறாள். 'நரசிங்கமாகி' என்று சொல்லியிருக்கலாமே? மீண்டும் 'அது'வா?

நரசிம்மம், மனிதனா, மிருகமா என்று தெரியவில்லை! அதனால் தான் 'அது'வோ?


நரசிம்மம், அவுணனின் 'முக்கியத்தை' முடிக்கின்றதாம் (முக்கியம் - 'பெருமை' என்ற பொருளில் இருந்து, தற்பொழுது மாறியுள்ளதைக் கவனிக்கவும்)!

'மூவுலகில் மன்னர் அஞ்சும்' என்கின்றாள்! வார்த்தைகளைச் சற்று 'Jumble' செய்யலாமா?

'மூவுலகில் மன்னர் அஞ்சும் அவுணன் முக்கியத்தை, முன் நரசிங்கம் அது ஆகி முடிப்பான்' - மூன்று உலகங்களில் உள்ள எல்லா மன்னர்களும் (தேவர்களும் தான்) பயப்படும் இரணியனின் பெருமையை முன்பு நரசிம்மமாக வந்து முடிக்கிறான்!

வேறு விதமாக 'Jumble' செய்யலாமா?

***

'முன் நரசிம்மன் ஆகி, அவுணன் முக்கியத்தை முடிப்பான்; மூவுலகின் மன்னர் அஞ்சும் மது (அது ஆகி), சூதனன்'!

மது எனும் அரக்கனைக் கொல்ல ஹயக்ரீவனாய் (மனித உடல், குதிரை முகம்) உருவம் எடுத்தவனே மது-சூதனன்!


நரசிம்மனை அழைத்தவுடன், உடனே ஹயக்ரீவரும் நினைவுக்கு வருகிறது யசோதைக்கு (இருவருமே மனித உடல், மிருக முகம் கொண்டவர்கள்)! 'அது', இங்கு ஹயக்ரீவரைக் குறிக்கும்!

'மன்னர் அஞ்சும்' - மன்னர்கள் (இரணியன், மது, கம்சன்), தம்முடைய சக்தியின் அளவைக் கடந்த செயல்களைச் செய்யும் நரசிம்மரையும், மதுசூதனனையும் (கண்ணனையும்) கண்டு அஞ்சினார்களாம்!

இங்கு கண்ணனையும் சேர்த்துக் கொள்வதற்கு, அவன் சிறு பிராயத்திலேயே செய்த மாயச் செயல்களே காரணமாம் (பூதனை, சகடம், தேனுகன், காளியன், பிலம்பன், அகாசுரன், சீமாலிகன், கோவர்த்தனோத்தரணம், ...)!

நரசிம்மனே (மதுசூதனனே) குழலூதுகின்றானாம்! எப்படி?

***

இடம்: தேவலோகம்
காலம்: மயங்கும் காலம்
இசை: All தேவலோக Radio
வாசிப்பது: தும்புரு, கின்னரர்

தேவேந்திரன் (கொட்டாவியுடன்): தும்புரு! கின்னரர்களே! ஏதாவது வாசியுங்களேன்!

தும்புரு (இவர் தூங்க, என் வீணை தான் கிடைத்ததா ...): சரி தேவேந்திரா!

(களாவதி எனும் தன் வீணையை ஸ்ருதி சேர்க்க ஆரம்பிக்கிறார்; எங்கிருந்தோ ஒரு குழல் கானம் கேட்கிறது)

தேவேந்திரன்: தும்புரு! உன் வீணையில் இருந்து புல்லாங்குழல் சத்தமா! அதிசயமாக இருக்கிறதே!

தும்புரு: பிரபோ! நான் இன்னும் ஸ்ருதியே சேர்க்கவில்லை! அதற்குள் எப்படி வாசிக்க முடியும்?

(தேவேந்திரன், ’இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை’ என்ற முணுமுணுக்கிறான்)

தேவேந்திரன்: சரி! வேகமா ஆரம்பி!

தேவேந்திரன் (திடீரென்று): ஆ!! காதை இழுக்காதே! வலிக்கிறது! விடு!

(சுற்றும் முற்றும் பார்க்கிறான்; அருகில் யாரும் இல்லை; நாரதர் வந்து கொண்டிருக்கிறார்)

தேவேந்திரன் (ஐயோ! இப்ப என்ன பிரச்சனையோ!): நாரதரே! நீர் தானே என் காதைப் பிடித்து இழுத்தீர்!

நாரதர்: தேவேந்திரா! விளையாடாதே! இப்போது தானே நான் உள்ளே வருகிறேன்!

(குழல் கானம் இன்னும் சத்தமாகக் கேட்கிறது; நாரதர் சுற்றும் முற்றும் பார்க்கிறார்; பிறகு கீழே பார்க்க, விஷயம் விளங்குகிறது)

நாரதர் (தன் காதையும் தடவிக் கொண்டே): தேவேந்திரா! யாரும் உன் காதைப் பிடித்து இழுக்கவில்லை! பூவுலகில், கண்ணன் பிருந்தாவனத்தில் குழலூதுகிறான். அவன் இசை, இங்கும் வந்து நம் காதை இழுக்கிறது!

தேவேந்திரன்: வரும்போதே ஆரம்பித்து விட்டீரா உம் கலகத்தை! இசை எங்காவது காதை இழுக்குமா?

நாரதர்: தேவேந்திரா! நான் கலகம் செய்ததே இல்லை! சாதாரண இசை என்றால், நாம் தான் காதைத் தீட்டிக் கொண்டு கேட்க வேண்டும். சில சமயம் காதைப் பொத்திக் கொள்ள வேண்டி வரும்! ஆனால், கண்ணனின் குழலிசை என்றால், அது, காதுடன் சேர்த்து, நம்மையும் இழுக்கும்!

தேவேந்திரன்: சரி! தும்புரு! கின்னரர்களே! நாரதரே! நீங்கள் இப்படி ஏன் வாசிப்பதில்லை!

(’நீங்கள் கொடுக்கும் 5 காசு சன்மானத்திற்கு, தேவ கானமா கிடைக்கும்! காக்காய் கானம் தான் கிடைக்கும்!’ என்று ஒரு கின்னரன் முணுமுணுக்கிறான்)

தேவேந்திரன்: என்னது?

அதே கின்னரன்: ஒன்றுமில்லை தேவேந்திரா! கண்ணனைப் போல் எங்களால் உங்கள் காதைப் பிடித்து இழுக்க இயலாது என்றேன்!

தேவேந்திரன்: இதெல்லாம் நல்லா பேசு! வாசிக்கும்போது மட்டும் ராகம், தாளத்தை கோட்டை விட்டுரு!

நாரதரும், தும்புருவும் (சேர்ந்து): இனிமேல் நாங்கள் வீணை வாசிப்பதை மறந்து விடுகிறோம்!

கின்னரர்கள் (சேர்ந்து): நாங்களும் இனிமேல் எங்கள் கின்னரங்களைத் தொட மாட்டோம்!

(’உங்களை எல்லாம் 'Recession' என்று சொல்லி வேலையை விட்டுத் தூக்கிடணும் ... வந்து பேசிக்கறேன்’ என்று தேவேந்திரன் முணுமுணுக்கிறான்)

தும்புரு: கூப்பிட்டீர்களா பிரபோ!

தேவேந்திரன்: இதெல்லாம் நல்லா கேக்குமே! எல்லோரும் வாருங்கள்! நாமும் பூலோகத்திற்கே சென்று குழலிசையை நன்கு அனுபவிக்கலாம்!

('நாரதர் வந்தாலே கலகம் தான் ... இப்போது நம் வேலைக்கு வேட்டு!' என்று ஒரு கின்னரன் புலம்ப, அனைவரும் பூமிக்கு வர ஆயத்தமாகின்றனர்)

***

மேலே வருணித்த காட்சியைக் கூறியது அடியேன் அல்ல! யசோதையாழ்வார்!

'மதுசூதனன் வாயில் குழலின் ஓசை, செவியைப் பற்றி வாங்க' என்கின்றாள்! தேவேந்திரன் காதையும் அது இழுத்தால் அதிசயமா என்ன?
 
(உண்மையில், ‘செவியைப் பற்றி வாங்க’ என்றால், நாம் இதைக் கேட்கக் கூடாது என்று தவிர்த்தாலும், இந்த இசை, நம்மை வலுக்கட்டாயமாகக் கேட்க வைக்கும் -அதாவது, ’நம் செவியைப் பற்றி, நம் கவனத்தை வாங்க’ என்று அர்த்தம்!)

'நன்னரம்புடைய தும்புருவோடு, நாரதரும் தம் தம் வீணை மறந்து' விடுகிறார்களாம்!

'கின்னர மிதுனங்களும், தம் தம் கின்னரம் தொடுகிலோம்' (தொட மாட்டோம்) என்கின்றனராம்!

கண்ணனின் குழல் இசை கேட்ட பிறகு, தேவேந்திரன் மனது வேறு எந்த இசையிலும் லயிக்காது! தினமும் தூங்குவதற்கு, 'அந்தக் குழலோசை போல் நீங்களும் வாசிக்க வேண்டும்' என்று கட்டளை இடுவான்! அது போல், இவர்களால் வாசிக்க இயலாதே!

இதிலிருந்து தப்பிக்க வழி? ’இனிமேல் வீணை, கின்னரங்களைத் தொட மாட்டோம்’ என்றது சரியான Strategy' தானே!

***

ல்லாப் பாசுரங்களையும் முடிந்தால் படியுங்கள்! படிக்க முடியவில்லை என்றால், கேளுங்கள்! நமக்கும் அவன் குழலிசை கேட்க வேண்டும் என்ற ஆவல் உண்டாகும்!

கடைசிப் பாசுரத்தில், திருமொழியைப் படிப்பதன் பலனாக பெரியாழ்வார் கூறுவது:

'குழலை வென்ற குளிர் வாயினராகி, சாது கோட்டியுள் கொள்ளப் பாடுவாரே'

குழல் இசையையும் வென்ற, இனிய வாக்குள்ளவர்கள் ஆவார்கள்; அவர்களுக்குப் பேச்சுத் திறமை உண்டாகும் என்ற நம்பிக்கை உண்டு!

ஏதாவது அதி முக்கியமான 'Meeting' இருந்தால், திருமொழியை 3 முறை சொல்லி விட்டுச் செல்லுங்கள்! உங்கள் பேச்சுக்கு மதிப்பிருக்கும் (இதை அடியேன் அனுபவத்தில் கண்டுள்ளேன்)!

படிப்பவர்கள், சாதுக்களின் குழுவில் சேர்வர்!

இறைவன் அருள் பெறுவதற்கு, அவன் அருள் பெற்ற சாதுக்களை அடைவதே முதல் படி!

- நரசிம்மர் மீண்டும் வருவார்!

1 கருத்துகள்:

Rangan Devarajan said...

அன்பர்களே

இந்தப் பதிவு, மாதவிப் பந்தலில் முன்னரே அடியேனால் எழுதப் பட்டது. இதற்கான Comments அங்கு உள்ளன.

அங்கு சென்றால், தங்கள் எண்ணங்களுடன், மற்ற அடியவர்களின் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.



  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP