Tuesday, May 18, 2010

நரசிம்மன் கல்யாணம்


'கல்யாணம் வரை சொல்லி முடித்து விட்டுத்தான் வீட்டுக்குப் போவேன்' என்று பாவை, தன் தோழியிடம் தொடர்ந்து சொல்கிறாள் ...

***

தோழி: அந்தக் காலக் கல்யாணங்கள் 5 நாள்! அதைச் சொல்லவே நீ 5 நாட்கள் ஆக்காமல், கொஞ்சம் வேகமா சொல்லுடீ! பக்கத்து விட்டுப் பையன் பார்க்கில் சாயங்காலம் 5 மணிக்கு கண்ணாமூச்சி விளையாடக் கூப்பிட்டிருக்கான்!

பாவை: பொறாமையோ? மேலே கேளு! எங்கள் இருவரையும் மணப் பந்தலில், கிழக்கு முகமாக, ஹோம குண்டத்தின் முன், மணையில் உட்கார வைத்தனர்.

மாதவன் 3 மந்திரங்கள் மூலம், எனக்கு குடும்ப பாரத்தைச் சுமக்கும் சக்திக்காக சோமனையும், என் இளமைக்காக கந்தர்வர்களையும், என் அழகிற்காக அக்னியையும் பிரார்த்தித்தான்.

(சோமன், தன் மனைவி சூர்யாவுக்காக சோமனை - அதாவது தன்னையே - குறிப்பிட்டு மந்திரம் சொல்வது, அதிசயமானது!)

கோவிந்தன், 4 மந்திரங்கள் மூலம் (ரிக் 10.85.36-39) பகன், அர்யமா, சவிதா, இந்திரன், அக்னி, சுரியன், வாயு, சரஸ்வதி ஆகியோரை வணங்கி என் கையைப் பிடித்தான் (கைத்தலம் பற்ற)! என் கையுடன், 'இதயத்தை'யும் கொடுத்தேன்!

தோழி: இதயமா? நல்லெண்ணெய் ரொம்ப விலையாச்சே! அதையும் உன் அப்பா கொடுத்தாரா?

பாவை: அடி வாங்கப் போறே நீ! என் கை விரல்கள் ஐந்தையும், ஒரு குவிந்த தாமரை போல் சேர்த்து வைக்க, அவன் என் கைப்பற்றினான்! 'குவிந்த கைகள்' ஒரு முத்திரை! இது, இதயத்தைக் குறிக்கும்!


(கை விரல் நுனிகளில் நரம்புகள் முடிவதால், அதனைத் தடவிக் கொள்ளுதல், நரம்புகளை தளர்த்தி, மன அமைதியை அளிக்கும்; விரல்களைக் குவித்து வைத்து, இரண்டு கைகளையும் ஒன்றோடொன்று சுமார் 5 நிமிடங்கள் தடவிக் கொள்வது, மனதை அமைதிப் படுத்தும் ஒரு உடல் பயிற்சியாகச் செய்யலாம்!)

***

பாவை: நல்ல நேரத்தில் - மத்தளமும் நாதஸ்வரமும் சேர்ந்து இசைக்க (மத்தளம் கொட்ட), நல்ல பெரிய வெள்ளை வலம்புரிச் சங்குகள் சப்திக்க (வரிசங்கம் நின்றூத), புரோகிதர் மந்திரம் சொல்ல - மதுசூதனன் எனக்குத் தாலி கட்டினான்! இப்படியாக, மாங்கல்ய தாரணம் முடிந்தது! என் கனவில் என் வாழ்க்கைக் கனவு நிறைவேறியது!

(நல்ல நேரம் வந்ததை, 'மத்தளம் கொட்ட' என்பதன் மூலம் நம் பாவை குறிப்பிடுகிறாள்)

தோழி: உடனே எல்லாரும் மேடைக்குப் பாய்ந்து, கை குலுக்கிவிட்டு, சாப்பிடப் போயிருப்பார்களே?

பாவை: இது மட்டும் உனக்குத் நல்லா தெரியுமே?

தோழி: எவ்வளவு கல்யாணம் பார்க்கறேன்! கல்யாணக் காட்சின்னா, 'கெட்டி மேளம்', 'மாங்கல்யம் ...', தானே? அப்புறம் வயிறு தானே?

பாவை: கேலியை நிறுத்து! உண்மையில், 'மாங்கல்யம் ...' அது மந்திரமே இல்லை! அதற்கு அர்த்தம், 'இது மங்களகரமானது. இதை உன் கழுத்தில் நான் கட்டுகிறேன்! நீ என்னுடன், சகல சௌபாக்கியங்களுடனும் இருக்க வேண்டும்'. தாலி கட்டும் போது, எந்தக் கடவுளையும் நினைத்து மந்திரம் சொல்வதில்லை!

தோழி: அப்படியா?

பாவை: எங்கள் கல்யாணத்தில், மிக முக்கியமானது இது இல்லை! அதுனால தான் இதைப் பற்றி நான் பாசுரத்தில் சொல்லலை!

தோழி: பின் எதுடீ முக்கியம்?

***

(பாவை தொடர்கிறாள்)

தோழி: ஏய்! தாலி கட்டியாகி விட்டதல்லவா? சீக்கிரம் கனவை முடிடீ!

பாவை: முக்கியாமன நிகழ்ச்சி வரலையே! அதற்குள் அவசரம் உனக்கு! வைதீகர்கள் (வாய் நல்லார்), நல்ல வேதங்களை ஓதினர் (மந்திரத்தால் நல்ல மறை ஓதி)! எங்கள் திருமணத்திற்கு, அந்த விஷ்ணுவும், அந்த அக்னியுமே சாட்சி!

(மறை 'ஓத' என்று இருக்க வேண்டும்! 'ஓதி' என்று பாசுரம் இட்டுள்ளாள் நம் பாவை. இது எச்சத் திரிபு!

'வாய் நல்லார் நல்ல மறை ஓத, காய்சின மாகளிறன்னான், மந்திரத்தால் பாசிலை நாணல் பரிதி வைத்து, என் கை பற்றி, தீ வலம் செய்யக் கனாக் கண்டேன்'

என்று பொருள் கொள்ள வேண்டும்!)

தோழி: ஏண்டி 'நல்ல மறை' என்கிறாய்? 'கெட்ட மறை'யும் இருக்கிறதா என்ன?

பாவை: வேதத்தில், முதலில் (பூர்வ பாகம்), யாகத்தின் வகைகள், அவைகளைச் செய்யும் முறைகள் பற்றிக் கூறப் படுகின்றது. பின்னரே (உத்தர பாகம்), புருஷ சூக்தம் போன்றவற்றில், எல்லாவற்றிலும் உள்ளே உறையும் விஷ்ணுவின் ஸ்வரூப குணங்கள் சொல்லப் படுகின்றன. பெரும்பாலும், கல்யாண ஹோமத்தில் நாராயணனின் பெருமைகளைக் கூறும் புருஷ சூக்தமே முதலில் சொல்லப் படுகின்றது! இதைத் தான் 'நல்ல மறை' என்றேன்!

தோழி: Thanks-டி! இப்பதாண்டீ கனவில், நனவாக ஒன்று சொல்லி இருக்கே!

பாவை: பயங்கரக் கோபம் கொண்ட பெரிய யானை (காய் சின மா களிறு) போல் கம்பீரமான (அன்னான்) கண்ணன், அக்னி குண்டத்தைச் சுற்றி, பசுமையான இலைகளை உடைய நாணல் புல்லை (பாசு இலை நாணல்) , தரையில் காப்பாக வைத்து (படுத்து), வாசனை உடைய சின்ன மரக் குச்சிகளை (ஸமித்துகளை) வைத்து (பரிதி வைத்து), தன் வலது கையால் என் கையைப் பற்றி (என் கை பற்றி), தீயை வலம் செய்தான் (தீவலம் செய்ய)!


ஒரு அடி எடுத்து வைத்தவுடன், அவன் குனிந்து, தன் கையால் என் திருவடி பற்றினான்!

(அளவற்ற பலமும் சக்தியும் படைத்த எம்பெருமானும், தாயாரிடம் சரணாகதி அடைய வேண்டும் என்று இவள் சொல்கின்றாளோ?)

ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், (திரும்பி, பின்னால் வரும்?!?) மஹா விஷ்ணுவின் மீது ஒரு மந்திரம் சொல்லி (யஜுர் அஷ்டகம்-3, ப்ரஸ்ந-7, பஞ்-89), எங்களை நன்றாக வைக்குமாறு வேண்டினான்! இப்படி, 7 முறை (ஸப்த பதி) செய்தோம்!

தோழி: அப்படி என்ன வேண்டினான் அவன்?

பாவை: நீ (வாழ்க்கையில்) ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், விஷ்ணு உன் பின்னாலேயே இருந்து, உன்னை (என்னையும்) காக்கட்டும்!

- விஷ்ணு உனக்கு, உன் குடும்பத்திற்கு வற்றாத உணவு அளிக்கட்டும்!
- விஷ்ணு உனக்கு, வியாதியற்ற உடம்பையும், சக்தியையும் அளிக்கட்டும்!
- விஷ்ணு உனக்கு, விரதங்களைக் கடைப்பிடிக்க மனமும், சக்தியும், அளிக்கட்டும் (தர்மபத்னியாக இரு!)
- விஷ்ணு உனக்கு, 'மண வாழ்வு' இனிமையாக இருக்கட்டும்!
- விஷ்ணு உனக்கு, வற்றாத செல்வம் (பசு, குதிரை, யானை, நிலம், ஆபரணம்) அளிக்கட்டும்!
- விஷ்ணு உனக்கு, எல்லாக் காலங்களிலும் கணவனிடம் இருந்து பிரியா வரம் அளிக்கட்டும்!
- விஷ்ணு உனக்கு, என்னுடன் சேர்ந்து நல்ல குழந்தைகளை அளிக்கட்டும்!

தோழி: ஆஹா! கேக்கறத்துக்கே நல்லா இருக்கே! நிஜமாவே இப்படி நடந்தா நல்லாயிருக்குமே!

பாவை: வேத முறைப்படி நடக்கும் கல்யாணத்தில், தீவலம் முடிந்த பிறகு தான் 'திருமணம்' முடிந்ததாகக் கணக்கு! கை குலுக்குதல், பரிசளித்தல் எல்லாம் இதற்குப் பின் தான் நடக்க வேண்டும்!

தோழி: இழுக்காம, மேலே சொல்லுடி!

பாவை: கண்ணன் தீயினில் நெய் விட, தேவர்களின் (சோமன், கந்தர்வன், அக்னி, இந்திரன், வாயு, அஸ்வினி தேவர்கள், ப்ருஹஸ்பதி, ஸவிதா, விஸ்வ தேவர்கள், வருணன், ஆகாஸ தேவதை) ஆசிகளைப் பெற, 'ப்ரதான ஹோமம்' எனப்படும் 16 மந்திரங்கள் கொண்ட ஹோமம் நடந்தது!

***

தோழி: எனக்கு ஒரு சந்தேகம்!

பாவை: என்னடீ?

தோழி: இந்தக் கண்ணன், ஆரம்பத்தில் இருந்தே, 'வரும், ஆனால் வராது' எனும்படித்தானே இருக்கிறான்! ஒரு நாள் வந்தால், ஒரு மாதம் வருவதில்ல! கல்யாணத்தின் பின் ஓடி விட்டால்?

பாவை: இவ்வளவு தானா? நான் ஏதோன்னு பயந்துட்டேன்! கண்ணன், அக்னி சாட்சியாக, என்னைக் கைவிட மாட்டேன் என்று மந்திரம் சொல்லியுள்ளான்! அக்னியே கை விட்டாலும், விஷ்ணு சாட்சியாகச் சொன்னதால், கண்ணனால் என்னை விட முடியாது! விஷ்ணு சாட்சியாகக் கை கொடுத்ததால், என்னாலும் அவனை விட முடியாது!

தோழி: அதெப்படி?

பாவை: என்ன இப்படிக் கேட்டுட்டே? இந்தப் பிறவியிலும் (இம்மைக்கும்), 'ஏழேழ்' பிறவியிலும் (ஏழேழ் பிறவிக்கும்), அவன் நமக்குப் பிடித்தவனாயிற்றே (பற்றாவான்) நாராயணன்? நமக்கெல்லாம் உரிமையாளன் (நம்மை உடையவன்) ஆயிற்றே அந்த நாராயணன் (நாராயணன் நம்பி)! அந்த நாராயணனே ஒப்புக் கொண்டதால், யாராலும் கை விடமுடியாது!

தோழி: ஏழாம் வாய்ப்பாடில், 7x7=49 என்று வருமே? அந்த 49-ஆ? ஒண்ணே தாங்க முடியலை! 49, ரொம்பக் கஷ்டம்ப்பா!

பாவை: உனக்குக் கணக்கு வரும்னு காட்டிக்கணுமாக்கும்?

மழை வேணும்னு யாகம் செய்தால், ஒரு முறை பலமாகப் பெய்து, பின் நின்று விடும்! ஆனால், நாராயணன் திருவடிகளைப் பற்றினால், நம் ஆத்மா உள்ள அளவும், கால தத்வம் உள்ள வரையிலும் நமக்கு பகவதனுபவம் உண்டு! இதைத் தான் 'ஏழேழ்' என்று சொன்னேன்!

நமக்கும் அவனுக்கும் உள்ள உறவு, ஒண்ணா ரெண்டா, எடுத்துச் சொல்ல?

தோழி: அப்படி என்னடி எப்போதும் பிரிக்க முடியாத உறவு?

பாவை: ஏய்! 'எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம்'னு, திருப்பாவையிலேயே சொன்னேனே? அப்போ தூங்கிட்டு இப்போ கேட்டா? சரி ... போனாப் போறது! இன்னொரு தடவை சொல்றேன்! ஆனால், நானே Repeat பண்ணறதுக்குப் பதிலா, குலசேகரரைச் சொல்லச் சொல்றேன்!

***

ரங்கனைக் காண முடியாமல் குலசேகரர் தவிக்கிறார்! அரங்கனோ, அவரிடம் கருணை காண்பிக்க மறுக்கிறான்!

கருணை காட்ட மறுக்கும் அரங்கனை விட்டு, மற்ற தெய்வங்களைப் பற்றும் சாமானியர்களைப் போல் அல்லாது, 'நீ என்னை எவ்வளவு சோதித்தாலும், வெறுத்து ஒதுக்கினாலும், அது நல்லதற்கே என்று நினைத்து, மீண்டும் மீண்டும் உன் திருவடிக்கே வருவேன்' என்று, திருவித்துவக் கோட்டு எம்பெருமானான உய்ய வந்த பெருமாளைப் பார்த்துச் சொல்கின்றார் குலசேகரர்:

வித்துவக் கோட்டு அம்மானே! கோபத்தால், தனது சிறு குழந்தையை வெறுத்துத் தள்ளினாலும், மீண்டும் தாயிடமே வந்து சேரும் குழந்தையைப் போல், உன்னிடமே மீண்டும் வருவேன் (தந்தை-தனயன் உறவு)!

என் கண்ணா! கணவன், எல்லோரும் வெறுக்கத் தக்க செயல்களைச் செய்தாலும், அவனைத் தவிர வேறு ஆண்மகனை ஏறெடுத்தும் பார்க்காத பதிவிரதையைப் போல், உன்னிடமே மீண்டும் வருவேன் (நாயகன்-நாயகி உறவு)!

அபய வரதா! அரசன் எத்தனை துயரம் செய்தாலும், அவன் நல்லது செய்வான் என்று காத்திருக்கும் (இந்தக் கால வழக்கப்படி, மீண்டும் ஓட்டுப் போடும்) குடிமகனைப் போல், உன்னிடமே மீண்டும் வருவேன் (உடல்-உயிர் உறவு - 'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' - புறநானூறு)!

மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணா! மருத்துவர், கத்தியால் எவ்வளவு அறுத்தாலும் (சட்டை Pocket-ஐ எவ்வளவு சுரண்டினாலும்) மீண்டும் அவரிடமே செல்லும் நோயாளி போல், உன்னிடமே மீண்டும் வருவேன் (காப்பாறுபவன்-காப்பாற்றப் படும் பொருள் உறவு)!


புட்கொடியானே! கடலில் செல்லும் கப்பலின் கூம்பு மேல் உள்ள பறவை, எல்லா இடங்களிலும் அலைந்து திரிந்து, கரையைக் காண முடியாமல், மீண்டும் அந்தக் கூம்பு மேல் வந்து உட்காருவது போல், உன்னிடமே மீண்டும் வருவேன் (தாங்குபவன்-தாங்கப்படும் பொருள் உறவு)!

தாமரைக் கண்ணா! சூரிய கிரணங்கள் எவ்வளவு எரித்தாலும், சந்திரனுக்கு மலராது, சூரியனுக்கு மட்டுமே மலரும் தாமரையைப் போல் உனக்காகவே காத்திருப்பேன் (ஆண்டான்-அடிமை உறவு)!


மழைக் கண்ணா! எவ்வளவு தான் மழை பெய்யாமல் இருந்தாலும், மழை மேகத்தையே எதிர்பார்த்துக் காத்திருக்கும் பயிர்கள் போல, உன்னையே எதிர்பார்த்துக் காத்திருப்பேன் (அறிபவன்-அறியப்படும் பொருள் உறவு)!

கடல் வண்ணா! ஆறுகள் எவ்வளவு வளைந்து, பாய்ந்து, நீண்டு ஓடினாலும், கடைசியில் கடலிடம் வந்து சேர்வது போல், உன்னிடமே வந்து சேர்வேன் (சொத்துக்கு உரியவன்-சொத்து உறவு)!

திருமகள் கேள்வா! செல்வம் வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்குபவனிடம், அந்தச் செல்வமே தானாக வந்து சேர்வது போல், உன்னையே அடைய விரும்புவேன் (போகத்தை அனுபவிப்பவன்-போகப் பொருள் உறவு)!

எனக்கும், இந்த உலகத்தில் உள்ள வேறு எந்தப் பொருளுக்கும், ஒன்றோ, அல்லது, சில உறவுகளோ இருக்கலாம்! ஆனால், எனக்கு, உன்னிடத்தில் மட்டும் தான் இந்த 9 உறவுகள் அனைத்தும் ஒரு சேர இருக்கின்றன! எனவே, உன்னிடமே மீண்டும் மீண்டும் வருவேன்!

***

பாவை: என்ன! நமக்கும் அவனுக்கும் என்ன உறவு என்று இப்போதாவது புரிஞ்சதா ?

தோழி: ம்ம்! மேலே சொல்லு!
- கனவு தொடரும்!

0 கருத்துகள்:



  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP