Showing posts with label திருக்கோட்டியூர். Show all posts
Showing posts with label திருக்கோட்டியூர். Show all posts

Sunday, May 16, 2010

நம்பன் நரசிம்மன்


பெரியாழ்வாரின் திருக்கோட்டியூர் பெருமையும், புராணமும் தொடர்கின்றன ...
 
***

கொம்பின் ஆர் பொழில்வாய்* குயிலினம் கோவிந்தன் குணம் பாடு சீர்*
செம்பொன் ஆர் மதில் சூழ்* செழுங்கழனி உடைத் திருக்கோட்டியூர்*
நம்பனை நரசிங்கனை* நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால்*
எம்பிரான் தன் சின்னங்கள்* இவர் இவர் என்று ஆசைகள் தீர்வனே.
நாவகாரியம் 4-4-9

கிளைகள் நிறைந்த சோலைகளிலே, குயில் கூட்டங்கள் கோவிந்தன் குணம் பாடுகின்ற இரைச்சலும், சுத்தமான பொன் பொருந்தியுள்ள மதில் சுவர்களாலே சூழப் பெற்றதும், வளம் மிகுந்த வயல்களை உடையதும் ஆன திருக்கோட்டியூரில் வாழும் கடவுளான நரசிம்மனைத் துதிப்பவர்களைக் கண்டால், 'இவர்களே எம்பெருமான் இருப்பதன் அடையாளம் என்று நினைத்து, என் ஆசைகள் தீரப் பெறுவேன்'.

(கொம்பு - மரக் கிளை; ஆர் - நிறைந்த, பொருந்திய; சீர் - இரைச்சல், பாட்டுச் சத்தம், சீரான; நம்பன் - கடவுள்)

மரமில்லாது கிளையா? மரங்களா, அல்லது கிளைகளா? ஆழ்வார் குழம்பி விட்டாரோ?
 
***

ரங்களும், புதர்களும் அடர்ந்து இருந்தால் அது காடு! அங்கு குயில், மயில் போன்ற பறவைகள் இருந்தாலும், கழுகு போன்ற பறவைகளும் உண்டு. பயங்கர மிருகங்களும் இருப்பதால், மனிதர்களும் இருக்க மாட்டார்கள்!

மரங்கள் மிகவும் அதிகமில்லாமல், ஆனால், கிளைகள் அதிகமாகப் படர்ந்து, அங்கு நிழல் அதிகமாக இருந்தால் மட்டுமே அது சோலை! இங்கு தான் மயிலும், குயிலும் அழகாகப் பாடும்! மனிதர்களும் ஓய்வு எடுக்க இயலும்!

இப்படிப்பட்ட சோலைகள் அதிகம் இருப்பதாலேயே, 'மரம் ஆர் பொழில்' என்னாமல், 'கொம்பு ஆர் பொழில்' என்கின்றாரோ ஆழ்வார்?

திருக்கோட்டியூர் கோயில் மதிலில் தங்கம் இருக்கின்றதாம்! ஊரில், செழுமையான வயல்களும் இருக்கின்றதாம்!

அடியேன் இரண்டு வருடங்களுக்கு முன் (கோயில் மதிலில் உள்ள தங்கத்தை கொஞ்சம் சுரண்டி எடுக்கலாம் என்று ஆசைப்பட்டு) திருக்கோட்டியூர் சென்ற பொழுது மதிலில் தங்கமே இல்லை (இது வரைக்கும் தங்கத்தை விட்டு வைத்திருப்பார்களா என்ன?)!

தங்கம் உள்ள மதிலும் திருக்கோட்டியூருக்கு ஒரு சிறப்பு தானே?

***


விட்ட கதையை மீண்டும் தொடலாமா?

மந்தர மலைக்கு சென்று தவம் செய்து, இரணியன் பிரமனிடம் இருந்து வரங்களைப் பெறுகிறான். இவன் பெற்ற வரங்களை, பாகவதம், கம்ப ராமாயணம் வாயிலாக ஏற்கனவே நாம் குறிப்பிட்டாலும், செவ்வை சூடுவாரின் பாடலையும் பார்த்து விடலாம் (ஒரே ஒரு பாடல் தான்)!

பங்கயப் பொகுட்டின் மேலான் படைத்தன தம்மின் மாளான்;
அங்கண் வானுலகின், மண்ணின், அகத்தினில், புறத்தினில் துஞ்சான்;
கங்குலும், பகலும் மாயான்; கனல் உமிழ் படையின் பொன்றான்;
வெங்கண் வாள் அவுணன் பெற்ற வரனை என் விளம்புகேம் ஆல்.
1624

பாகவதத்திலோ, நரசிம்ம புராணத்திலோ, விஷ்ணு புராணத்திலோ, கம்பராமாயணத்திலோ, சூடுவார் பாகவதத்திலோ, இரணியன் முதலில் 'சாகா வரம்' கேட்டதாகக் கூறப்படவில்லை (தன் தாய்க்குக் கூறும் உபதேசத்தில், 'பிறந்தால் கட்டாயம் இறக்க வேண்டும்' என்றும் சொல்கிறான்).

இப்படி வரம் பெற்ற இரணியன், மூவுலகிலும் யாராலும் அழிக்க முடியாத அரசனாக, 71 சதுர் யுகங்கள் ஆள்கிறான்.

அதுவரை? தேவர்கள்? பாவம்!
 
***

இடம்: ஒளிந்திருக்கும் இடம்
நேரம்: பயப்படும் நேரம்

(இரணியனால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள், உதவியை நாடி, கைலாயம் செல்கின்றனர்)

தேவர்கள்: ஈசனே! சரணம்!

ஈசன்: ஏம்பா தவம் செய்யும்போது தொந்தரவு பண்ணறீங்க!

தேவர்கள்: பிரபோ! இரணியன் லொள்ளு தாங்க முடியலை!

ஈசன்: வரம் கொடுத்த பிரம்மாவிடம் போங்க! நானும் கூட வந்து நல்லா நாலு வார்த்தை கேக்கறேன்!

(எல்லோரும் பிரமனிடம் செல்கின்றனர்)

பிரமன்: வாருங்கள் ஈசனே! தேவர்களே! இன்னும் யாருக்காவது நான் வரம் கொடுக்கணுமா?


இந்திரன்: ஐயோ! இனிமேல் நாங்கள் யாருக்கும் 'Recommendation'-க்கு உங்களிடம் வரமாட்டோம்!

பிரமன்: பின்னே இப்போ எதுக்கு வந்தீங்க?

இந்திரன்: வரம் கொடுத்தா மட்டும் போதுமா? அதிலிருந்து மீள வழியை யார் சொல்லுவாங்களாம்?

பிரமன்: என் வேலை வரம் கொடுப்பது மட்டும் தான்! காக்கும் கடவுள் தான் உங்களைக் காக்க வேண்டும்!

(கை விரிக்கிறார் அவர்)

ஈசன்: வாருங்கள்! எல்லோரும் பரந்தாமனிடம் செல்வோம்!

(பாற்கடலில், இவர்கள் பிரச்சனையைக் கேட்கிறார் நாராயணன்)


பரந்தாமன்: இரணியன் ஆதிக்கம் எங்கும் உள்ளது. அவன் ஆதிக்கம் எங்கும் இல்லாத இடம் சொல்லுங்கள்! அங்கு சென்று ரகசியமாய்ப் பேசி முடிக்கலாம்!

பிரமன்: பூவுலகில், கதம்ப முனிவர் தவம் செய்யும் வனம் தான் அவன் ஆதிக்கம் இல்லாத இடம்! அங்கு மட்டும் தான், அவர் செய்யும் தவத்தால் எப்போதும் நாராயண நாமம் ஒலிக்கின்றது!

பரந்தாமன்: வாருங்கள்! எல்லோரும் அங்கு செல்வோம்!

(எல்லோரும் கதம்ப வனத்திற்குச் செல்கின்றனர்)

***

இடம்: கதம்ப வனம்
நேரம்: கூட்டம் கூடும் நேரம்

(கதம்ப வனத்தில், எம்பெருமானை நோக்கித் தவம் செய்து கொண்டிருக்கிறார்; ஆனால், மும்மூர்த்திகளும் இங்கு! அவர்களுடன் அங்கு, முப்பத்து முக்கோடி தேவர்களும்! எல்லோரும் அருகே இருந்தும், அவர்களைப் பார்க்கத் தவம் செய்கிறார் கதம்ப ரிஷி!)

(சிறிது நேர உரையாடலின் பின் ...)

பரந்தாமன்: அவனுடைய முடிவை நான் செய்யப் போகிறேன். அந்தக் காலத்தை எதிர்பார்த்துக் காத்திருங்கள்!

(அருகில் இருக்கும் சங்கு கர்ணனைப் பார்த்து)

நீ சென்று இரணியன் மனைவி வசந்தமாலையின் வயிற்றில் பிரகலாதனாகப் பிற!

முற்றிலும் அடங்கியவனாகிய தன் புதல்வனும், என் பக்தனுமாகிய பிரகலாதனுக்கு எப்பொழுது இரணியன் துரோகம் செய்கிறானோ, அப்போது வரங்களால் பலமுள்ளவனகிலும், நான் தோன்றி, இரணியனைக் கொல்வேன்'.

(இதைக் கேட்ட தேவர்கள் ஆரவாரம் செய்கின்றனர்!)

ஏற்கனவே, மரக்கிளைகளில் உள்ள குயில்கள் கோவிந்தனின் குணம் பாடுவது சத்தமாக இருக்கும்! இப்பொழுது, 33 கோடி தேவர்களும் ஆரவாரம் செய்தால் எப்படி இருக்கும்?

(ஆஹா ... போட்டுட்டான்யா நச்சுன்னு நங்கூரத்த ... கதைக்கும், பெரியாழ்வார் பாசுரத்தில் வரும் மரக்கிளைக்கும், குயில்களுக்கும்!’ என்று நினைக்கிறீர்களா?)

அதுக்குத் தான் பெரியாழ்வார் போன பாசுரத்திலேயே, எல்லாம் ‘Adjust' ஆயிரும்னாரே! ஹி ... ஹி ...

***

வங்க இருந்து பேசின இந்தக் கதம்ப வனம் தாங்க நம்ம திருக்கோட்டியூர்!

நரசிம்மாவதாரம் துவங்கியது இங்க தானுங்க! தூணில் இல்லீங்க!

மேலே கூறிய கதை வருவது, ப்ரம்ம வைவர்த்த புராணம், மற்றும் பிர்ம்மாண்ட புராணத்தில் (பாகவதத்திலும், நரசிம்ம புராணத்திலும் இல்லை)!

இந்தத் தலத்தின் பழைய பெயர், திரு + கோஷ்டி + ஊர். அதாவது, திரு (மும்மூர்த்திகள், தேவர்கள்) கோஷ்டியாய் (கூட்டமாய்) இருந்த ஊர்!

மும்மூர்த்திகளும் இங்கு இருந்ததால், இந்த ஊரின் பெயர், திருக்கு + ஓட்டி + ஓர். அதாவது, பாவங்களை ஓட்டக் கூடிய ஊர்!

இரணிய வதம் முடியும் வரை, தேவர்கள் இங்கு ஒளிந்து இருக்கின்றனராம்! பின்னர் தவம் கலைந்த ரிஷி, இந்திரனிடமிருந்து நடந்ததை அறிகிறார்.

இந்திரன், அவர் வேண்டியதற்கு இணங்க, விஸ்வகர்மா, மயன் இருவரையும் அழைத்து, தேவலோகத்தில் இருப்பது போன்ற அஷ்டாங்க விமானத்தை இங்கு அமைத்துக் கொடுக்கிறான்! மூன்று அடுக்குகள் கொண்ட இந்த விமானம் பார்க்கக் கண் கொள்ளாக் காட்சி! தனிக் கலை அமைப்பு!

இந்த விமானத்தின் வடபகுதியில், இரணியனைக் கொன்ற நரசிம்மன் உருவமும் (வடக்காழ்வான்), தென் பகுதியில், இரணியனைப் பிடித்துக் கொண்ட நரசிம்ம உருவமும் (தட்சிணேஸ்வரன்) உள்ளன. இவை, காண்போரைப் பிரமிக்கச் செய்யக் கூடியவை!

கோயிலின் உற்சவர் சௌம்ய நாராயணன், மற்ற கோயில்களின் உற்சவர்களைப் போல் பஞ்ச லோகத்தில் இல்லாது, தூய வெள்ளியில் இருக்கின்றார்! இது, கதம்ப ரிஷிக்கு இந்திரன் அளித்ததாக ஐதீகம்!

இந்தப் பெருமை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

***

'ம்பனை, நரசிங்கனை' என்கிறார் ஆழ்வார்!

நம்பன்’ என்றாள், கடவுள்! ஆனாலும், இவனை நம்பியவர்களான பிரகலாதன், கஜேந்திரன், திரௌபதி போன்றோரை, கூப்பிட்டவுடன் உடனே காக்கின்றானாம்! எனவே, இவன் ‘நாம் நம்பத் தகுந்தவன்' என்கிறாரோ ஆழ்வார்?

கோயிலின் முதல் தெய்வம் நரசிம்மன்! எனவே, நம்பனை, நாராயணனை என்னாது, 'நம்பனை, நரசிங்கனை' என்கின்றார் ஆழ்வார்!

தான் எம்பெருமானைப் பார்க்காவிட்டாலும், நரசிம்மனைப் பாடுபவர்களைக் கண்டால், 'அவன் இருக்கின்றான்! இவர்களே அவன் அடையாளங்கள்! இவர்களைப் பார்த்தால், அவனைப் பார்த்தது போல் ஆயிற்று! என் ஆசைகள் தீரும்' என்று, பாகவதர்களின் ஏற்றத்தையும் கூறி, பாசுரத்தை முடிக்கிறார்!

- நம்பனே சரணம்!

Friday, May 14, 2010

திருக்கோட்டியூர் நரசிம்மன்


தற்கு முந்திய இரண்டு திருமொழிகளில் (4-2, 4-3), திருமாலிருஞ்சோலையில் (மதுரை அழகர் கோயில்) வசிக்கும் எம்பெருமானை ரசித்த பெரியாழ்வார், அடுத்து, திருக்கோட்டியூர் எம்பெருமானை ரசிக்கிறார்.

திருக்கோட்டியூர் எம்பெருமானை, மனம், மொழி, உடலால், 'நாவகாரியம்' (4-4) எனும் திருமொழியில் எம்பெருமானை அனுபவிக்கின்றார் பெரியாழ்வார். இப்படி, தன்னைப் போல் எம்பெருமானை அனுபவிக்காதவரை, பழிக்கவும் செய்கிறார் இத் திருமொழியில்.

இதில், நரசிம்மனை, 2 முறை அழைக்கிறார்.

***

பூதம் ஐந்தொடு, வேள்வி ஐந்து* புலன்கள் ஐந்து, பொறிகளால்*
ஏதமொன்றும் இலாத* வண் கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர்*
நாதனை, நரசிங்கனை* நவின்று ஏத்துவார்கள் உழக்கிய*
பாததூளி படுதலால்* இவ்வுலகம் பாக்கியம் செய்ததே.
நாவகாரியம் 4-4-6
 
ஐந்து பூதங்களாலும், ஐந்து வேள்விகளாலும், ஐந்து புலன்களலும், ஐந்து பொறிகளாலும், சிறிதும் குற்றமில்லாத உதாரமான கைகளை உடையவர்கள் வாழும் திருக்கோட்டியூரில் எழுந்தருளியுள்ள தலைவனாகிய நரசிம்மனைத் துதிக்கும் அடியவர்களின் திருவடிகள் பட்ட தூசிகள் (உலகத்தில் அங்குமிங்கும்) படுவதால் இந்த உலகம் பாக்கியம் செய்தது.


(ஐந்து பூதங்கள் - நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்; ஐந்து வேள்வி - பிரம்ம, தேவ, பூத, பித்ரு, மனித வேள்விகள்; ஐந்து புலன்கள் - மெய், வாய், கண், மூக்கு, செவி; பொறிகள் - சுவை, ஒலி, ஊறு, ஓசை, நாற்றம்; ஏதம் - குற்றம்; வண்கையினர் - உதாரமான கைகள் உடையவர்கள்; உழக்கிய - மிதித்த; தூளி - தூசி)

***

ந்து பூதங்கள் - பஞ்ச 'மஹா' பூதங்கள் - இந்த அகிலத்தின் எந்தப் பொருளும், உயிரும், இந்த ஐந்தின் கலவையே! இவையே உலகின் ஆதாரம் (நம் உடலும் தான்)! எனவே, இந்த ஐந்தைத் தான் முதலில் கூறுவர் பெரியோர்!

பிரம்ம வேள்வி - வேதம் ஓதுதல்
தேவ வேள்வி - வேள்வித் தீயில் உணவில் ஒரு பகுதியை இடுதல்
பூத வேள்வி - நாய், பூனை, காக்கைக்கு உணவிடுதல்
பித்ரு வேள்வி - தர்ப்பணம் செய்து உணவின் ஒரு பகுதியை அளித்தல்
மனித வேள்வி - விருந்தினருக்கு உணவளித்தல், தானம் செய்தல்.
 
புலன்கள் ஐந்து! பொறிகள் எத்தனை? புலன்கள் ஐந்திற்கும், ஒவ்வொரு கடமை! உணர்வது! எனவே, பொறிகளை 'ஐந்து' என்று சொல்லாமல் விட்டு விட்டார்! 
 
ஆழ்வார் ஐந்து பூதங்கள் என்றது, அவைகளால் ஆன நம் உடலையே! இந்த உடலினால் நாம் என்ன செய்ய வேண்டும்?

'இது என்ன அபத்தமான கேள்வி - நல்லா சாப்டு, தூங்கி, 'TV' பார்த்து, 'Party'-களுக்குச் சென்று, 'Enjoy' பண்ணனும்னு தானே!' என்கிறீர்களா?

தொண்டரடிப்பொடியாழ்வார் இதற்குப் பதில் சொல்வார்!

***
 
வண்டினம் முரலும் சோலை* மயிலினம் ஆலும் சோலை*
கொண்டல் மீதணவும் சோலை* குயிலினம் கூவும் சோலை*
அண்டர் கோன் அமரும் சோலை* அணி திருவரங்கம் என்னா*
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி* நாய்க்கு இடுமினீரே!
திருமாலை-14

மூன்றாவது வரியின் கடைசியில், 'திருவரங்கம் என்னா மிண்டர்' என்கின்றாரே? இதற்கு என்ன அர்த்தம்?

எம்பெருமான் கொடுத்த வாயினால், நாம் 'அரங்கா!' என்று கூடச் சொல்ல வேண்டாமாம்! அணி அரங்கம் என்று, அவன் இருக்கும் ஊரின் பெயரைச் சொன்னாலே போதுமாம்!
 
அப்படிச் சொல்லவில்லை என்றால், அவர்கள் நன்றி கெட்டவர்களாம் (மிண்டர்கள்)! அவர்களுக்கு, வாய் இருந்து பயனில்லையாம்! அவன் பெயர் சொல்லாதவர்கள் (வாயினால்) உண்ணும் சோற்றை விலக்கி, நாய்க்கு இடுங்கள் என்கின்றார்!

ஏன் நாய்க்கு இட வேண்டுமாம்? ஒரு நாள் சோறு போட்டாலே நாய், போட்டவரிடம் நன்றியுடன் இருக்குமே! 'மிண்டர்களை விட, நாய்கள் எவ்வளவோ மேல்!' என்கின்றார்!

இனி, குறைந்தது 'அரங்கா' என்று சொல்லி விட்டாவது 'Party'-க்குச் செல்லலாமே :-)

***

ந்து பூதங்களை - உடலை - முதலில் கூறிய பெரியாழ்வார், பிறகு, அவற்றினால் செய்ய வேண்டியதாக, வேள்விகளைச் சொல்லுகிறார்!

'உடலைப் பெற்ற நீங்கள், அதனால் எம்பெருமானை வழிபடுங்கள்! நம் முன்னோர்களை நினையுங்கள்! தான தர்மம் செய்யுங்கள்!' என்கின்றாரோ?

வேள்விகளுக்குப் பிறகே, நம் புலன்கள், பொறிகள் செய்யும் மற்ற கடமைகளைக் கூறுகின்றார்!உடலாலும், புலன்களாலும், பொறிகளாலும், செய்ய வேண்டியதைச் செய்து வந்தவர்களே 'குற்றம்' ஒன்றும் இல்லாத நல்ல கைகளை உடையவர்களாம் ('ஏதம் ஒன்றுமிலாத வண்கையினார்கள்' என்று, திருக்கோட்டியூர் செல்வ நம்பியையும் சேர்த்துச் சொல்வதாக ஒரு வியாக்கியானம் உண்டு)!

திருமாலிருஞ்சோலை

திருக்கோட்டியூரில் தேவர்களுக்குத் தலைவனான நரசிம்ம மூர்த்தியும் இருக்கிறான்! இப்படி, 'நல்ல கைகளும்', நரசிம்மனும் சேர்ந்து இருப்பதாலேயே (முந்திய இரு திருமொழிகளில் [4-2, 4-3] பாடிய திவ்ய தேசமான திருமாலிருஞ்சோலையை விட) திருக்கோட்டியூர் திவ்ய தேசம் அதிகம் பெருமை உடையதாயிற்றாம்!

திருக்கோட்டியூர்

திருக்கோட்டியூரில் நரசிம்மனா? இது என்ன புதுக்கதை?

***

து ஒன்றும் புதுக் கதை இல்லீங்னா! பெரியாழ்வார், 'நீ முன்னால ஆரம்பிச்சு, நிறுத்தின பழைய கதையை இப்ப 'Continue' பண்ணு; எல்லாம் அடுத்த பாசுரத்தில் 'Adjust' ஆயிரும்' என்று அடியேனுக்குக் கொடுத்த தைரியம் தாங்னா!

இடம்: இரணியன் அரண்மனை
காலம்: 'Advice' காலம்
நேரடி வருணனை: செவ்வை சூடுவார்

 
(ஜய விஜயர்கள், இரணியகசிபு, இரணியாட்சன் எனும் பலமுள்ள அசுரர்களாக வளர்கின்றனர். வராக உரு எடுத்து வந்த பரந்தாமன் இரணியாட்சனைக் கொல்கிறார். கோபமடைந்த இரணியன், அசுரர் தலைவர்களைத் தன் அரண்மனைக்கு அழைத்துப் பேசுகின்றான்)

'தரையின் மீது போய், "மாயவன் உரு" எனச் சாற்றும்
அரிய வேள்வியே முதலிய அறங்களை அழித்து,
புரியும் அந்தணர் பொன்று உற புரிமினோ!;
புரியின், கரிய வன் வலி கெடு உலப்பார் கடவுளரே'.

(தேவர்களுக்கு பலம், மனிதர்கள் வேள்வியில் கொடுக்கும் அவிர்பாகம் தான்! அவற்றைத் தடுங்கள்! தேவர்கள் சக்தி குறைந்து விடும்! பின்னர் நாம் அவர்களை வெல்லலாம்!)

மாபுரங்களை அழித்தனர் சிலர்; பல மணி சேர்
கோபுரங்களை தகர்த்தனர் சிலர்; சிலர் குழுமி
தூபுரங்கள் சூழ் பதத்தினர் நொவ்வுற அலைத்தார்;
ஆபுரங்களைக் செகுத்தனர் சிலர், வெகுண்டு அடர்த்தே.

(உடனே அசுரர்கள் பூமியில் உள்ள நகரங்களை அழித்து, கோயில்களைத் தகர்த்தனர்; தேவ மாதரைத் துன்புறுத்தினர்; பசுக்களைக் கொன்றனர்)

இரணியன் அசுரனாயிற்றே? அடுத்து என்ன செய்ததாக நம் வர்ணனையாளர் கூறுகின்றார்?

***

ம்பி மனைவியான ருஷாபானுவும், அவளுடைய 7 மக்களும் அழுகின்றனராம்! இதைப் பற்றிக் கவலைப் படாது, தம்பி மனைவியை அபகரிக்க நினைக்கிறானாம் இரணியன்! ஆனால் தன் தாயான திதியும் அழுவதால், எல்லோரையும் மயக்க, அவர்களுக்கு 'உபதேசம்' செய்கிறானாம் இரணியன்!


'சுயக்ஞன் எனும் அரசன் போரில் கொல்லப்பட, அவன் உறவினர் அழுகின்றனர். யமன் அங்கு தோன்றி அவன் உறவினருக்கு உபதேசம் செய்கிறான் (இதற்குப் பெயர் தான் Advice-க்குள்-Advice)!

'கண்ணி வீழ்ந்து; அதன் பெடையினை கலந்து அழுகுலில், இங்கு அம்
மண்ணின் வீழ் தர, மாய்த்தனன் வாங்குவில் வேடன்;
எண்ணி மாய்ந்தவற்கு இரங்கல் என்? இறக்கும் இவ்வுடல்;' என்று
அண்ணல் நல்லறக் கடவுள் சொற்றனன்; அவர் தெளிந்தார்.

(உடம்பு என்று இருந்தால், என்றாவது இறக்கும். அதனால், 'அழுகாச்சியை' விட்டு, அடுத்த வேலையைப் பார்!)

(மீண்டும் வர்ணனையாளர் தொடர்கிறார்)

'அன்னை நீ துயர் நீங்கு' என அறைதலும், திதிதான்
இன்னல் தீர்ந்தனள்; இருந்தனள்; இரணியன் ஏகி,
மின்னின் மாய் உடல் விளிவுறா வரம் பெறல் வேண்டி,
மன்னு மாதவம் வளர்ப்ப நன் மந்தரத்து அடைந்தான்.

(இதைக் கேட்ட திதிக்கு மனம் தெளிகிறது; இரணியன், இறக்காமல் இருக்க வரம் வேண்டி தவம் செய்ய மந்தர மலை அடிவாரம் செல்கிறான்)

இத்துடன், பெரியாழ்வார் கதையை நிறுத்தச் சொல்கிறார் ... ஹி ... ஹி ...!

***

ந்த நரசிம்ம மூர்த்தியைப் பார்க்க வருகின்றார்களாம் அடியவர்கள்!

ஏற்கனவே திருக்கோட்டியூருக்குச் சிறப்பு நரசிம்மாரால்! அதிகம் சிறப்பு 'நல்ல கைகளால்'! இன்னும் சிறப்பு, நரசிம்மன் பெயரைச் சொல்லும் அடியவர்களின் பாத தூளி திருக்கோட்டியூரில் இருந்து, இந்த உலகத்தில் படுவதால்!

திருக்கோட்டியூருக்கு இவ்வளவு சிறப்பா, இல்லை இன்னும் இருக்கிறதா?

- திருக்கோட்டியூர் வைபவம் தொடரும்!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP