Showing posts with label ஜய விஜயர். Show all posts
Showing posts with label ஜய விஜயர். Show all posts

Friday, May 14, 2010

சிம்மம் ஊதிய குழல்


ண்ணன் குழலூதும் இனிமையை, அவனுடன் கானகம் செல்லும் நண்பர்கள் (நண்பிகளும் தான்) சொல்லக் கேட்கிறாள் யசோதை. தானும் கேட்டு மகிழ்ந்ததைப் போல், 'நாவலம் (3-6)' என்ற திருமொழியை இயற்றியுள்ளாள்!

5-ம் பாசுரத்தில், நரசிம்மரைக் குழலூதச் செய்கின்றாள்!

***
 
முன் நரசிங்கமதாகி அவுணன் 
முக்கியத்தை முடிப்பான்* மூவுலகில்
மன்னரஞ்ச(சும்)* மதுசூதனன் வாயில் 
குழலின் ஓசை* செவியைப் பற்றி வாங்க*
நன் நரம்புடைய தும்புருவோடு*
நாரதனும் தம் தம் வீணை மறந்து*
கின்னர மிதுனங்களும் தம் தம்
கின்னரம்* தொடுகிலோம் என்றனரே.
நாவலம் 3-6-5

முன்பு நரசிங்க வடிவமாகி, இரணியனது பெருமையை அழித்தான்; மூவுலகிலும் உள்ள மன்னர்கள் அஞ்சும்படி; மதுசூதனன் தனது வாயிலே வைத்து ஊதிய குழலின் ஓசை காதுகளைப் பற்றி இழுக்க, நல்ல வீணைகளை உடைய தும்புருவும், நாரதரும், வைத்திருக்கும் வீணையை மறந்தனர். கின்னரர்களும், 'எங்கள் கின்னரங்களை இனிமேல் தொடமாட்டோம்' என்கின்றனர்.

(முக்கியம் - பெருமை; நரம்பு - வீணை; கின்னர மிதுனம் - கின்னரத் தம்பதியர்)

யசோதை, 'முன்' என்கின்றாளே! வேறு வழியின்றி, விளக்கம் எழுதும் அடியேனும் கொஞ்சம் ’முன்பு’ செல்கின்றேன் .. ஹி... ஹி...

***
 
(சாபத்தினால், சென்ற பாசுரத்தில் விழ ஆரம்பித்த ஜய விஜயர்கள், அடுத்த நரசிம்மர் பாசுரம் வரை காத்திருந்தனர்; அது வந்தவுடன், எங்கு விழலாம் என்று இடம் தேட ...)



இடம்: ஜம்பூத்வீபம் (அட ... பூமி தாம்ப்பா)
காலம்: படைப்புக் காலம்

ஜயன்: விஜயா! பார்த்தா நல்ல இடமாகத் தெரியுது! நேரே பெரிய மனிதர்களாக விழுந்து விடலாம்!

விஜயன்: வேண்டாம்! இந்த இடம் ரொம்பப் பொல்லாததாம்! அப்படியே விழுந்தால் 'தாய், தந்தை பெயர் தெரியாதவர்கள்' என்ற பட்டம் வருமாம்!

ஜயன்: சரி! மற்றவர்களைப் போலவே குழந்தைகளாகப் பிறந்து விடலாம்!

ஜயன் (திடீரென்று ...): கீழே பார்! திருமணம் நடைபெறுகிறது! பெரிய மண்டபம் வேறு! சாப்பாடும் நடக்கின்றது!

(கீழே, தக்ஷப் பிரஜாபதியின் 13 பெண்களுக்கும், கச்யபப் பிரஜாபதிக்கும் திருமணம் நடந்து கொண்டிருக்கிறது!)

விஜயன்: வந்தவுடனே சாப்பாடா! வந்த வேலையைப் பார்!

ஜயன் (யோசித்து ...): இந்தத் தம்பதியரின் குழந்தைகளாகப் பிறந்தால் என்ன?

விஜயன்: நல்ல Idea!

ஜயன் (காலரைத் தூக்கி விட்டு): இதெல்லாம் நமக்குச் சகஜமப்பா!

(கீழே விழ ஆரம்பிக்கிறான்)

விஜயன்: கொஞ்சம் இரு!

ஜயன் (கடுப்புடன்): இப்போ என்ன?

விஜயன்: பார்த்து விழு! நாம் திதிக்குப் பிறந்ததாக விஷ்ணு புராணத்துல போட்டிருக்கு! தப்பா விழுந்தா பின்னால் பிரச்சனை வரும்! வரத்தையும் மறந்து விடாதே! பிறவியில் இருந்தே தேவர்களுக்கும், நாராயணனுக்கும் விரோதிகள் நாம்! அப்பதான் வந்த வேலை சீக்கிரம் முடியும்!

(பூமியில் 'Entry' ஆகின்றனர் இருவரும் - கச்யபருக்கும், தக்ஷனின் இரண்டாம் புதல்வியான திதிக்கும், இரணியகசிபு, இரணியாட்சன் எனும் இரு அசுரர்களாக!)

***

'ரசிங்கமதாகி' என்கிறாள். 'நரசிங்கமாகி' என்று சொல்லியிருக்கலாமே? மீண்டும் 'அது'வா?

நரசிம்மம், மனிதனா, மிருகமா என்று தெரியவில்லை! அதனால் தான் 'அது'வோ?


நரசிம்மம், அவுணனின் 'முக்கியத்தை' முடிக்கின்றதாம் (முக்கியம் - 'பெருமை' என்ற பொருளில் இருந்து, தற்பொழுது மாறியுள்ளதைக் கவனிக்கவும்)!

'மூவுலகில் மன்னர் அஞ்சும்' என்கின்றாள்! வார்த்தைகளைச் சற்று 'Jumble' செய்யலாமா?

'மூவுலகில் மன்னர் அஞ்சும் அவுணன் முக்கியத்தை, முன் நரசிங்கம் அது ஆகி முடிப்பான்' - மூன்று உலகங்களில் உள்ள எல்லா மன்னர்களும் (தேவர்களும் தான்) பயப்படும் இரணியனின் பெருமையை முன்பு நரசிம்மமாக வந்து முடிக்கிறான்!

வேறு விதமாக 'Jumble' செய்யலாமா?

***

'முன் நரசிம்மன் ஆகி, அவுணன் முக்கியத்தை முடிப்பான்; மூவுலகின் மன்னர் அஞ்சும் மது (அது ஆகி), சூதனன்'!

மது எனும் அரக்கனைக் கொல்ல ஹயக்ரீவனாய் (மனித உடல், குதிரை முகம்) உருவம் எடுத்தவனே மது-சூதனன்!


நரசிம்மனை அழைத்தவுடன், உடனே ஹயக்ரீவரும் நினைவுக்கு வருகிறது யசோதைக்கு (இருவருமே மனித உடல், மிருக முகம் கொண்டவர்கள்)! 'அது', இங்கு ஹயக்ரீவரைக் குறிக்கும்!

'மன்னர் அஞ்சும்' - மன்னர்கள் (இரணியன், மது, கம்சன்), தம்முடைய சக்தியின் அளவைக் கடந்த செயல்களைச் செய்யும் நரசிம்மரையும், மதுசூதனனையும் (கண்ணனையும்) கண்டு அஞ்சினார்களாம்!

இங்கு கண்ணனையும் சேர்த்துக் கொள்வதற்கு, அவன் சிறு பிராயத்திலேயே செய்த மாயச் செயல்களே காரணமாம் (பூதனை, சகடம், தேனுகன், காளியன், பிலம்பன், அகாசுரன், சீமாலிகன், கோவர்த்தனோத்தரணம், ...)!

நரசிம்மனே (மதுசூதனனே) குழலூதுகின்றானாம்! எப்படி?

***

இடம்: தேவலோகம்
காலம்: மயங்கும் காலம்
இசை: All தேவலோக Radio
வாசிப்பது: தும்புரு, கின்னரர்

தேவேந்திரன் (கொட்டாவியுடன்): தும்புரு! கின்னரர்களே! ஏதாவது வாசியுங்களேன்!

தும்புரு (இவர் தூங்க, என் வீணை தான் கிடைத்ததா ...): சரி தேவேந்திரா!

(களாவதி எனும் தன் வீணையை ஸ்ருதி சேர்க்க ஆரம்பிக்கிறார்; எங்கிருந்தோ ஒரு குழல் கானம் கேட்கிறது)

தேவேந்திரன்: தும்புரு! உன் வீணையில் இருந்து புல்லாங்குழல் சத்தமா! அதிசயமாக இருக்கிறதே!

தும்புரு: பிரபோ! நான் இன்னும் ஸ்ருதியே சேர்க்கவில்லை! அதற்குள் எப்படி வாசிக்க முடியும்?

(தேவேந்திரன், ’இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை’ என்ற முணுமுணுக்கிறான்)

தேவேந்திரன்: சரி! வேகமா ஆரம்பி!

தேவேந்திரன் (திடீரென்று): ஆ!! காதை இழுக்காதே! வலிக்கிறது! விடு!

(சுற்றும் முற்றும் பார்க்கிறான்; அருகில் யாரும் இல்லை; நாரதர் வந்து கொண்டிருக்கிறார்)

தேவேந்திரன் (ஐயோ! இப்ப என்ன பிரச்சனையோ!): நாரதரே! நீர் தானே என் காதைப் பிடித்து இழுத்தீர்!

நாரதர்: தேவேந்திரா! விளையாடாதே! இப்போது தானே நான் உள்ளே வருகிறேன்!

(குழல் கானம் இன்னும் சத்தமாகக் கேட்கிறது; நாரதர் சுற்றும் முற்றும் பார்க்கிறார்; பிறகு கீழே பார்க்க, விஷயம் விளங்குகிறது)

நாரதர் (தன் காதையும் தடவிக் கொண்டே): தேவேந்திரா! யாரும் உன் காதைப் பிடித்து இழுக்கவில்லை! பூவுலகில், கண்ணன் பிருந்தாவனத்தில் குழலூதுகிறான். அவன் இசை, இங்கும் வந்து நம் காதை இழுக்கிறது!

தேவேந்திரன்: வரும்போதே ஆரம்பித்து விட்டீரா உம் கலகத்தை! இசை எங்காவது காதை இழுக்குமா?

நாரதர்: தேவேந்திரா! நான் கலகம் செய்ததே இல்லை! சாதாரண இசை என்றால், நாம் தான் காதைத் தீட்டிக் கொண்டு கேட்க வேண்டும். சில சமயம் காதைப் பொத்திக் கொள்ள வேண்டி வரும்! ஆனால், கண்ணனின் குழலிசை என்றால், அது, காதுடன் சேர்த்து, நம்மையும் இழுக்கும்!

தேவேந்திரன்: சரி! தும்புரு! கின்னரர்களே! நாரதரே! நீங்கள் இப்படி ஏன் வாசிப்பதில்லை!

(’நீங்கள் கொடுக்கும் 5 காசு சன்மானத்திற்கு, தேவ கானமா கிடைக்கும்! காக்காய் கானம் தான் கிடைக்கும்!’ என்று ஒரு கின்னரன் முணுமுணுக்கிறான்)

தேவேந்திரன்: என்னது?

அதே கின்னரன்: ஒன்றுமில்லை தேவேந்திரா! கண்ணனைப் போல் எங்களால் உங்கள் காதைப் பிடித்து இழுக்க இயலாது என்றேன்!

தேவேந்திரன்: இதெல்லாம் நல்லா பேசு! வாசிக்கும்போது மட்டும் ராகம், தாளத்தை கோட்டை விட்டுரு!

நாரதரும், தும்புருவும் (சேர்ந்து): இனிமேல் நாங்கள் வீணை வாசிப்பதை மறந்து விடுகிறோம்!

கின்னரர்கள் (சேர்ந்து): நாங்களும் இனிமேல் எங்கள் கின்னரங்களைத் தொட மாட்டோம்!

(’உங்களை எல்லாம் 'Recession' என்று சொல்லி வேலையை விட்டுத் தூக்கிடணும் ... வந்து பேசிக்கறேன்’ என்று தேவேந்திரன் முணுமுணுக்கிறான்)

தும்புரு: கூப்பிட்டீர்களா பிரபோ!

தேவேந்திரன்: இதெல்லாம் நல்லா கேக்குமே! எல்லோரும் வாருங்கள்! நாமும் பூலோகத்திற்கே சென்று குழலிசையை நன்கு அனுபவிக்கலாம்!

('நாரதர் வந்தாலே கலகம் தான் ... இப்போது நம் வேலைக்கு வேட்டு!' என்று ஒரு கின்னரன் புலம்ப, அனைவரும் பூமிக்கு வர ஆயத்தமாகின்றனர்)

***

மேலே வருணித்த காட்சியைக் கூறியது அடியேன் அல்ல! யசோதையாழ்வார்!

'மதுசூதனன் வாயில் குழலின் ஓசை, செவியைப் பற்றி வாங்க' என்கின்றாள்! தேவேந்திரன் காதையும் அது இழுத்தால் அதிசயமா என்ன?
 
(உண்மையில், ‘செவியைப் பற்றி வாங்க’ என்றால், நாம் இதைக் கேட்கக் கூடாது என்று தவிர்த்தாலும், இந்த இசை, நம்மை வலுக்கட்டாயமாகக் கேட்க வைக்கும் -அதாவது, ’நம் செவியைப் பற்றி, நம் கவனத்தை வாங்க’ என்று அர்த்தம்!)

'நன்னரம்புடைய தும்புருவோடு, நாரதரும் தம் தம் வீணை மறந்து' விடுகிறார்களாம்!

'கின்னர மிதுனங்களும், தம் தம் கின்னரம் தொடுகிலோம்' (தொட மாட்டோம்) என்கின்றனராம்!

கண்ணனின் குழல் இசை கேட்ட பிறகு, தேவேந்திரன் மனது வேறு எந்த இசையிலும் லயிக்காது! தினமும் தூங்குவதற்கு, 'அந்தக் குழலோசை போல் நீங்களும் வாசிக்க வேண்டும்' என்று கட்டளை இடுவான்! அது போல், இவர்களால் வாசிக்க இயலாதே!

இதிலிருந்து தப்பிக்க வழி? ’இனிமேல் வீணை, கின்னரங்களைத் தொட மாட்டோம்’ என்றது சரியான Strategy' தானே!

***

ல்லாப் பாசுரங்களையும் முடிந்தால் படியுங்கள்! படிக்க முடியவில்லை என்றால், கேளுங்கள்! நமக்கும் அவன் குழலிசை கேட்க வேண்டும் என்ற ஆவல் உண்டாகும்!

கடைசிப் பாசுரத்தில், திருமொழியைப் படிப்பதன் பலனாக பெரியாழ்வார் கூறுவது:

'குழலை வென்ற குளிர் வாயினராகி, சாது கோட்டியுள் கொள்ளப் பாடுவாரே'

குழல் இசையையும் வென்ற, இனிய வாக்குள்ளவர்கள் ஆவார்கள்; அவர்களுக்குப் பேச்சுத் திறமை உண்டாகும் என்ற நம்பிக்கை உண்டு!

ஏதாவது அதி முக்கியமான 'Meeting' இருந்தால், திருமொழியை 3 முறை சொல்லி விட்டுச் செல்லுங்கள்! உங்கள் பேச்சுக்கு மதிப்பிருக்கும் (இதை அடியேன் அனுபவத்தில் கண்டுள்ளேன்)!

படிப்பவர்கள், சாதுக்களின் குழுவில் சேர்வர்!

இறைவன் அருள் பெறுவதற்கு, அவன் அருள் பெற்ற சாதுக்களை அடைவதே முதல் படி!

- நரசிம்மர் மீண்டும் வருவார்!

Thursday, May 13, 2010

குடமாடும் கூத்தன்



கண்ணனை மிகவும் கெஞ்சிக் கூத்தாடி நீராட்டி, குழல் வாரி விடுகிறாள் யசோதை! அவன் மீண்டும் விளையாட ஓடிவிட, அவனை, 'உனக்குப் பூச்சூட வேண்டும்! வா!' என்று அழைக்கிறாள், 'ஆநிரை மேய்க்க' எனும் இந்தத் திருமொழியில்.

இதில் 7-ம் பாசுரத்தில், யசோதை நரசிம்மனைக் கொண்டாடுகிறாள்.

***

குடங்கள் எடுத்தேற விட்டு* கூத்தாடவல்ல எம் கோவே!*

மடங்கொள் மதிமுகத்தாரை* மால்செய்ய வல்ல என் மைந்தா!*
இடந்திட்டு இரணியன் நெஞ்சை* இருபிளவாக முன் கீண்டாய்!*
குடந்தைக் கிடந்த எம் கோவே!* குருக்கத்திப் பூச்சூட்ட வாராய்.
ஆநிரை 2-7-7

குடங்களை எறிந்து கொண்டு கூத்தாடும் திறமை உள்ள எம் தலைவனே! சந்தரன் போன்ற முகமுள்ள பெண்களை மயக்க வல்ல என் மைந்தனே! மடியில் இருத்தி, இரணியனின் மார்பை இரு கூறுகளாக முன்பு பிளந்தவனே! திருக்குடந்தையில் (கும்பகோணம்) பள்ளி கொண்டிருக்கும் என் தலைவனே! குருக்கத்திப் பூவை உனக்குச் சூட வேண்டும்! வா!


எம்பெருமான் கூத்தாடுவானா? இது என்ன கூத்து?

***
 
ண்ணன் ஆய்ப்பாடியில் வளர்கிறான்! அவன் பின்னே அஷ்ட லக்ஷ்மிகளும் அங்கு வந்து சேர்கின்றனர். மற்ற தேவர்களும் இவர்கள் பின்னே வந்துவிட்டனர்! ஆயர்களுக்கு அங்கு, உணவு, உடை, செல்வம் எல்லாம் வருகின்றது! பின்னாலேயே கர்வமும்!

இப்படி வருகின்ற செல்வச் செருக்கு நீங்குவதற்காக, ஆயர்கள் ஆடுவதுவே குடக்கூத்து!

தலையில் அடுக்குக் குடங்கள்! இரு தோள்களிலும், இரு கைகளிலும் இரண்டு குடங்கள்! வானத்தில் தொடர்ந்து ஒரு குடத்தை எறிந்து, அது கீழே விழாதபடி பிடித்து ஆடுகின்றனராம்! குடத்தில் கவனம் இருக்கும்போது, குடம் போல் உள்ள செருக்கு பறந்துவிடுமாம்!

ஆயர்களுக்குச் செருக்கு ஏற்படலாம். எம்பெருமானுக்கு ஏது?

இங்கு, 'எம் தலைவனே' என்றதனால், ஆயர்கள் எல்லோரும் குடமாடுவர் என்றும், அவர்கள் தலைவன் கண்ணன் என்றும் யசோதை கூறுகிறாளோ?

ஒரு வேளை எம்பெருமானும் அவர்களுடன் சேர்ந்து குடமாடினானோ?

***

திருநாங்கூர். 11 திவ்ய தேசங்கள் இருக்குமிடம்! இதில், (திரு) அரிமேய விண்ணகரமும் (#29) ஒன்று. 'அரிமேய விண்ணகரத்திற்கு' வழி கேட்டால் அநேகமாகக் கிடைக்காது. 'குடமாடு கூத்தர் கோயில்' என்று கேட்க வேண்டும்!
எம்பெருமானின் திருநாமமே 'குடமாடு கூத்தர்'. எனவே, எம்பெருமான் குடமாடியிருக்க வேண்டும்!

சிலப்பதிகாரத்தில், இளங்கோ அடிகள், 'வாணன் பேரூர் மறுகிடை நடந்து, நீணிலம் அளந்தான் ஆடிய குடமும்' (கடலாடு காதை 54-55) என்கின்றார்.
 
மங்கையார் மங்களாசாசனம் செய்யும்போது, 'குன்றதனால் மழை தடுத்துக் குடமாடு கூத்தன் ... ' என்கின்றார் (பெரிய திருமொழி 3-10-8).


குன்றைக் குடையாக எடுத்தவனாயிற்றே கண்ணன்! 'குடையாடு கூத்தன்' என்றல்லவோ எழுத வேண்டும்?

இதைத் தானே ஆண்டாளும் திருப்பாவையில், 'குன்று குடையாய் எடுத்தாய் ...' என்று அருளிச் செய்தாள்?

கண்ணன் குடமாடினானா? குடையாடினானா?

***
 
ம்மாழ்வார், அர்ச்சாவதாரப் பாசுரங்களில், 'பரஞ்சோதியை, குரவை கோத்த குழகனை, மணிவண்ணனை, குடக் கூத்தனை ...' என்றே குறிப்பிடுகிறார்.

மலையாள திவ்ய தேசங்களில், திருக்கடித்தானமும் (#70) ஒன்று. இங்கு, எம்பெருமானுக்கு நடை பெற்ற விழாக்களில், பெண்கள் குடை பிடித்து நடனமாடும் நிகழ்ச்சியும் இருந்ததாம்! காலப் போக்கில் இந்த நடனம் கைவிடப் பட்டது என்றும் கோயில் கர்ண பரம்பரைச் செய்தி.

நம்மாழ்வாரும் இச் செய்தியை,

கோயில் கொண்டான் தன் திருக்கடித்தானத்தை*
கோயில் கொண்டான் அதனோடு என்னெஞ்சகம்*
கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ* வைகுந்தம்

கோயில் கொண்ட குடக்கூத்த அம்மானே.

என்கின்றார். மேலும் சில ஆழ்வார் பாசுரங்களில், எம்பெருமான் குன்று குடையாக எடுத்த நிகழ்ச்சியே ’குடக் கூத்தன்’ என்பதற்குப் பொருளாக விவரிக்கப் பட்டுள்ளது.

உங்கள் ஓட்டு எதற்கு - குடைக்கா? குடத்துக்கா? இல்லை செல்லாத ஓட்டா (இரண்டிற்கும் போட்டால் செல்லாத ஓட்டு ... ஹி ... ஹி ... )

***
 
பாசுரத்தின் முதல் வரியில், ஆயர்களுக்குத் தலைவன் என்ற யசோதை, பெருமையுடன், இவன் தன் மகன் என்கின்றாள்! தன் மகன் எந்தப் பெண்ணையும் மயக்க வல்லவன் என்ற பெருமை! பெண்கள் எல்லோரும், 'உங்கள் மகன் எங்களை மயக்கிவிட்டான்' என்று மாளிகைக்கு வந்து இவளைக் குறை கூறுவதால், பாதிப் பெருமை, பாதிக் கவலை (நமக்கு இவ்வளவு மருமகள்கள் தேவைதானா என்றோ?)!

 
இரணியனை மார்பு பிளந்த களைப்பினால், திருக்குடந்தையில் படுத்துக் கிடப்பதாகச் சொல்வது இனிய கற்பனை!

இரணியனை, 'முன் கீண்டாய்' என்கின்றாள் யசோதை. 'முன்' நடந்தது என்ன?

***

இடம்: வைகுந்த வாசல்

காலம்: சபிக்கும் காலம்
 

(சிலர் சண்டை போடுவது போல் இரைச்சல் கேட்கிறது)

பரந்தாமன் (பாம்புப் படுக்கையில் இருந்து எழுந்து ஓடி வந்து): என்ன இது சத்தம்! இது என்ன வைகுந்தமா, சந்தைக் கடையா?

(அங்கு, நான்கு சின்னஞ்சிறு குழந்தைகள், இடையிலே உடையின்றி, ஏழாவது வாயில் காவலர்களான ஜய, விஜயர்களைப் பார்த்துக் கத்திக் கொண்டு இருக்கின்றனர்)

பரந்தாமன் (குழந்தைகளைப் பர்த்து): அடேடே! சனகரே! சனந்தனரே! சனாதனரே! சனத் குமாரரே! வாருங்கள்! வாருங்கள்! உங்களுக்கு என்ன கஷ்டம்! தங்கள் கோபத்திற்குக் காரணம் என்ன?

சனகர்: தங்களை தரிசனம் செய்ய வந்த எங்களை தங்கள் வாயிற்காவலர்கள் உள்ளே விடவில்லை! அவமானப் படுத்திவிட்டனர்!

விஜயன்: நாராயணா! வழி தவறி வந்துவிட்டனர் என்று நினைத்துவிட்டோம்!

ஜயன்: அச்சுதா! சிறுவர்கள் என்று நினைத்து விட்டோம்!

சனந்தனர்: எம்பெருமானே! எல்லோரையும் சமமாக நினைக்கும் வைகுந்தத்தில், இவர்கள் 'பெரியவர், சிறியவர்' என வித்தியாசப் படுத்திப் பார்த்ததால், வித்தியாசம் நிறைந்த பூலோகத்திற்கே செல்லும்படி சபித்தோம்! அப்போது தான் நீங்கள் வந்தீர்கள்!

நாராயணன்: ஜய விஜயரே! நீங்கள் தவறு செய்து விட்டீர்கள்!

(இந்தக் காலத்து 'Official' ஆக இருந்தால், வாயிற் காவலருக்கே 'Support' செய்து இருப்பார்)

ஜயன்: பிரபோ! மன்னித்து விடுங்கள்!

நாராயணன்: சரி! ஏழா? மூன்றா?

விஜயன்: என்ன?

நாராயணன்: பிறவியைச் சொன்னேன்! ... என் பக்தனாக வாழும் 7 பிறவி வேண்டுமா அல்லது என்னையே நிந்தித்து, எனக்கு விரோதியாக வாழும் மூன்று பிறவிகள் வேண்டுமா?

ஜயன்: ஒன்றாக மாற்ற முடியுமா?

சனாதனர் (கோபத்துடன், குறுக்கிட்டு): இது ரொம்ப ஓவராத் தெரியலை உனக்கே? மீண்டும் சபிக்கட்டுமா?

விஜயன்: ஐயோ! மூன்று பிறவியே போதும்! நாராயணா! உங்களையே நிந்தித்து, வைகுந்தத்திற்கு மீண்டும் விரைவில் வருவோம்!

(தொபுகடீர்! டமால்! என்ற சத்தம் உலகம் முழுவதும் கேட்கின்றது)
***

விழுந்த அந்த இருவர்!

க்ருத யுகத்தில் இரணியாட்சன், இரணியகசிபு (இரணியன்)!

த்ரேதா யுகத்தில் பின்னர், கும்பகர்ணன், ராவணன்!

துவாபர யுகத்தில் தந்தவக்ரன், சிசுபாலன்!
எம்பெருமானையே விரோதியாகக் கருதி, அவனையே நிந்தித்து, அவன் கையாலே மாண்டு, மீண்டும் அவனிடமே வந்தவர்கள்!

இருவரில் ஒருவனுக்கு மட்டும் அதீத வெறுப்பு (இரணியன், ராவணன், சிசுபாலன்)! இவனே முனிவரைச் சிறுவன் என்று எண்ணியவன் போலும்!

இதனாலேயே, எம்பெருமானைத் தீவிரமாக நிந்தை செய்வதையும் தியானம் என்கின்றனரோ!

சகோதரர்களில், இன்னொருவன் எம்பெருமானின் விரோதியாக இருந்தாலும் (இரணியாட்சன், கும்பகர்ணன், தந்தவக்ரன்), அதீத வெறுப்புக் கொண்டதாகக் கதை இல்லை!

சென்ற பாசுரத்தில், 'உளம் தொட்டு' என்றாரே ஆழ்வார்! அதற்கு இன்னொரு அர்த்தம்!

தான் தொட்ட உள்ளத்தில், பாசம் இருக்கிறதா என்று சோதித்தார்! தப்பித் தவறி இருந்து விட்டால், பின்னர் ஏழு பிறவி வந்து விடுமே! இரணியனே ஆனாலும், வைகுந்தத்தில் இருந்தவனாயிற்றே! எனவே, உடனே உள்ளத்தைச் சோதிப்பதை விட்டு, மார்பைப் பிளந்து, பிறவியில் இருந்து முக்தி அளிக்கிறார்!

***

’Back to the Future':

ஒவ்வொரு பாசுரத்திலும் ஒரு பூவைச் சொல்லி, 'உனக்கு இதைச் சூட்டுகிறேன், வா!' என்கின்றாள் யசோதை.

பலஸ்ருதி இல்லாத மிகச் சில திருமொழிகளில் இதுவும் ஒன்று!
யசோதையாழ்வார் எம்பெருமானுக்குச் சூட்டுவதாக, இந்தத் திருமொழியில் சொன்ன மலர்களில், துளசி இல்லை! ஏன் அவர் துளசியைச் சேர்க்கவில்லை என்பது யாருக்காவது தெரியுமா?

இந்தத் திருமொழி, தினமும் வைணவர்களால் பாராயணம் செய்யப் படவேண்டும் (நித்யாநுசந்தானத்தில் இந்தத் திருமொழி சேர்க்கப் பட்டுள்ளது)!


வீட்டில் மலர்கள் இல்லை என்றாலும், இந்தத் திருமொழியைச் சொன்னால், எம்பெருமானை மலர்களால் அர்ச்சனை செய்வதற்குச் சமம்!

வைணவக் கோயில்களில், திருமஞ்சன காலத்தில், இந்தத் திருமொழி சேவிக்கப் படுகிறது.

இந்தப் பாசுரத்தில், எம்பெருமானைப் பற்றி மேலும் விவரித்திருக்கிறார் ஆழ்வார். கண்டுபிடிக்கிறீர்களா?

- நரசிம்மர் மீண்டும் வருவார்

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP