Showing posts with label திருக்குடந்தை. Show all posts
Showing posts with label திருக்குடந்தை. Show all posts

Thursday, May 13, 2010

குடமாடும் கூத்தன்



கண்ணனை மிகவும் கெஞ்சிக் கூத்தாடி நீராட்டி, குழல் வாரி விடுகிறாள் யசோதை! அவன் மீண்டும் விளையாட ஓடிவிட, அவனை, 'உனக்குப் பூச்சூட வேண்டும்! வா!' என்று அழைக்கிறாள், 'ஆநிரை மேய்க்க' எனும் இந்தத் திருமொழியில்.

இதில் 7-ம் பாசுரத்தில், யசோதை நரசிம்மனைக் கொண்டாடுகிறாள்.

***

குடங்கள் எடுத்தேற விட்டு* கூத்தாடவல்ல எம் கோவே!*

மடங்கொள் மதிமுகத்தாரை* மால்செய்ய வல்ல என் மைந்தா!*
இடந்திட்டு இரணியன் நெஞ்சை* இருபிளவாக முன் கீண்டாய்!*
குடந்தைக் கிடந்த எம் கோவே!* குருக்கத்திப் பூச்சூட்ட வாராய்.
ஆநிரை 2-7-7

குடங்களை எறிந்து கொண்டு கூத்தாடும் திறமை உள்ள எம் தலைவனே! சந்தரன் போன்ற முகமுள்ள பெண்களை மயக்க வல்ல என் மைந்தனே! மடியில் இருத்தி, இரணியனின் மார்பை இரு கூறுகளாக முன்பு பிளந்தவனே! திருக்குடந்தையில் (கும்பகோணம்) பள்ளி கொண்டிருக்கும் என் தலைவனே! குருக்கத்திப் பூவை உனக்குச் சூட வேண்டும்! வா!


எம்பெருமான் கூத்தாடுவானா? இது என்ன கூத்து?

***
 
ண்ணன் ஆய்ப்பாடியில் வளர்கிறான்! அவன் பின்னே அஷ்ட லக்ஷ்மிகளும் அங்கு வந்து சேர்கின்றனர். மற்ற தேவர்களும் இவர்கள் பின்னே வந்துவிட்டனர்! ஆயர்களுக்கு அங்கு, உணவு, உடை, செல்வம் எல்லாம் வருகின்றது! பின்னாலேயே கர்வமும்!

இப்படி வருகின்ற செல்வச் செருக்கு நீங்குவதற்காக, ஆயர்கள் ஆடுவதுவே குடக்கூத்து!

தலையில் அடுக்குக் குடங்கள்! இரு தோள்களிலும், இரு கைகளிலும் இரண்டு குடங்கள்! வானத்தில் தொடர்ந்து ஒரு குடத்தை எறிந்து, அது கீழே விழாதபடி பிடித்து ஆடுகின்றனராம்! குடத்தில் கவனம் இருக்கும்போது, குடம் போல் உள்ள செருக்கு பறந்துவிடுமாம்!

ஆயர்களுக்குச் செருக்கு ஏற்படலாம். எம்பெருமானுக்கு ஏது?

இங்கு, 'எம் தலைவனே' என்றதனால், ஆயர்கள் எல்லோரும் குடமாடுவர் என்றும், அவர்கள் தலைவன் கண்ணன் என்றும் யசோதை கூறுகிறாளோ?

ஒரு வேளை எம்பெருமானும் அவர்களுடன் சேர்ந்து குடமாடினானோ?

***

திருநாங்கூர். 11 திவ்ய தேசங்கள் இருக்குமிடம்! இதில், (திரு) அரிமேய விண்ணகரமும் (#29) ஒன்று. 'அரிமேய விண்ணகரத்திற்கு' வழி கேட்டால் அநேகமாகக் கிடைக்காது. 'குடமாடு கூத்தர் கோயில்' என்று கேட்க வேண்டும்!
எம்பெருமானின் திருநாமமே 'குடமாடு கூத்தர்'. எனவே, எம்பெருமான் குடமாடியிருக்க வேண்டும்!

சிலப்பதிகாரத்தில், இளங்கோ அடிகள், 'வாணன் பேரூர் மறுகிடை நடந்து, நீணிலம் அளந்தான் ஆடிய குடமும்' (கடலாடு காதை 54-55) என்கின்றார்.
 
மங்கையார் மங்களாசாசனம் செய்யும்போது, 'குன்றதனால் மழை தடுத்துக் குடமாடு கூத்தன் ... ' என்கின்றார் (பெரிய திருமொழி 3-10-8).


குன்றைக் குடையாக எடுத்தவனாயிற்றே கண்ணன்! 'குடையாடு கூத்தன்' என்றல்லவோ எழுத வேண்டும்?

இதைத் தானே ஆண்டாளும் திருப்பாவையில், 'குன்று குடையாய் எடுத்தாய் ...' என்று அருளிச் செய்தாள்?

கண்ணன் குடமாடினானா? குடையாடினானா?

***
 
ம்மாழ்வார், அர்ச்சாவதாரப் பாசுரங்களில், 'பரஞ்சோதியை, குரவை கோத்த குழகனை, மணிவண்ணனை, குடக் கூத்தனை ...' என்றே குறிப்பிடுகிறார்.

மலையாள திவ்ய தேசங்களில், திருக்கடித்தானமும் (#70) ஒன்று. இங்கு, எம்பெருமானுக்கு நடை பெற்ற விழாக்களில், பெண்கள் குடை பிடித்து நடனமாடும் நிகழ்ச்சியும் இருந்ததாம்! காலப் போக்கில் இந்த நடனம் கைவிடப் பட்டது என்றும் கோயில் கர்ண பரம்பரைச் செய்தி.

நம்மாழ்வாரும் இச் செய்தியை,

கோயில் கொண்டான் தன் திருக்கடித்தானத்தை*
கோயில் கொண்டான் அதனோடு என்னெஞ்சகம்*
கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ* வைகுந்தம்

கோயில் கொண்ட குடக்கூத்த அம்மானே.

என்கின்றார். மேலும் சில ஆழ்வார் பாசுரங்களில், எம்பெருமான் குன்று குடையாக எடுத்த நிகழ்ச்சியே ’குடக் கூத்தன்’ என்பதற்குப் பொருளாக விவரிக்கப் பட்டுள்ளது.

உங்கள் ஓட்டு எதற்கு - குடைக்கா? குடத்துக்கா? இல்லை செல்லாத ஓட்டா (இரண்டிற்கும் போட்டால் செல்லாத ஓட்டு ... ஹி ... ஹி ... )

***
 
பாசுரத்தின் முதல் வரியில், ஆயர்களுக்குத் தலைவன் என்ற யசோதை, பெருமையுடன், இவன் தன் மகன் என்கின்றாள்! தன் மகன் எந்தப் பெண்ணையும் மயக்க வல்லவன் என்ற பெருமை! பெண்கள் எல்லோரும், 'உங்கள் மகன் எங்களை மயக்கிவிட்டான்' என்று மாளிகைக்கு வந்து இவளைக் குறை கூறுவதால், பாதிப் பெருமை, பாதிக் கவலை (நமக்கு இவ்வளவு மருமகள்கள் தேவைதானா என்றோ?)!

 
இரணியனை மார்பு பிளந்த களைப்பினால், திருக்குடந்தையில் படுத்துக் கிடப்பதாகச் சொல்வது இனிய கற்பனை!

இரணியனை, 'முன் கீண்டாய்' என்கின்றாள் யசோதை. 'முன்' நடந்தது என்ன?

***

இடம்: வைகுந்த வாசல்

காலம்: சபிக்கும் காலம்
 

(சிலர் சண்டை போடுவது போல் இரைச்சல் கேட்கிறது)

பரந்தாமன் (பாம்புப் படுக்கையில் இருந்து எழுந்து ஓடி வந்து): என்ன இது சத்தம்! இது என்ன வைகுந்தமா, சந்தைக் கடையா?

(அங்கு, நான்கு சின்னஞ்சிறு குழந்தைகள், இடையிலே உடையின்றி, ஏழாவது வாயில் காவலர்களான ஜய, விஜயர்களைப் பார்த்துக் கத்திக் கொண்டு இருக்கின்றனர்)

பரந்தாமன் (குழந்தைகளைப் பர்த்து): அடேடே! சனகரே! சனந்தனரே! சனாதனரே! சனத் குமாரரே! வாருங்கள்! வாருங்கள்! உங்களுக்கு என்ன கஷ்டம்! தங்கள் கோபத்திற்குக் காரணம் என்ன?

சனகர்: தங்களை தரிசனம் செய்ய வந்த எங்களை தங்கள் வாயிற்காவலர்கள் உள்ளே விடவில்லை! அவமானப் படுத்திவிட்டனர்!

விஜயன்: நாராயணா! வழி தவறி வந்துவிட்டனர் என்று நினைத்துவிட்டோம்!

ஜயன்: அச்சுதா! சிறுவர்கள் என்று நினைத்து விட்டோம்!

சனந்தனர்: எம்பெருமானே! எல்லோரையும் சமமாக நினைக்கும் வைகுந்தத்தில், இவர்கள் 'பெரியவர், சிறியவர்' என வித்தியாசப் படுத்திப் பார்த்ததால், வித்தியாசம் நிறைந்த பூலோகத்திற்கே செல்லும்படி சபித்தோம்! அப்போது தான் நீங்கள் வந்தீர்கள்!

நாராயணன்: ஜய விஜயரே! நீங்கள் தவறு செய்து விட்டீர்கள்!

(இந்தக் காலத்து 'Official' ஆக இருந்தால், வாயிற் காவலருக்கே 'Support' செய்து இருப்பார்)

ஜயன்: பிரபோ! மன்னித்து விடுங்கள்!

நாராயணன்: சரி! ஏழா? மூன்றா?

விஜயன்: என்ன?

நாராயணன்: பிறவியைச் சொன்னேன்! ... என் பக்தனாக வாழும் 7 பிறவி வேண்டுமா அல்லது என்னையே நிந்தித்து, எனக்கு விரோதியாக வாழும் மூன்று பிறவிகள் வேண்டுமா?

ஜயன்: ஒன்றாக மாற்ற முடியுமா?

சனாதனர் (கோபத்துடன், குறுக்கிட்டு): இது ரொம்ப ஓவராத் தெரியலை உனக்கே? மீண்டும் சபிக்கட்டுமா?

விஜயன்: ஐயோ! மூன்று பிறவியே போதும்! நாராயணா! உங்களையே நிந்தித்து, வைகுந்தத்திற்கு மீண்டும் விரைவில் வருவோம்!

(தொபுகடீர்! டமால்! என்ற சத்தம் உலகம் முழுவதும் கேட்கின்றது)
***

விழுந்த அந்த இருவர்!

க்ருத யுகத்தில் இரணியாட்சன், இரணியகசிபு (இரணியன்)!

த்ரேதா யுகத்தில் பின்னர், கும்பகர்ணன், ராவணன்!

துவாபர யுகத்தில் தந்தவக்ரன், சிசுபாலன்!
எம்பெருமானையே விரோதியாகக் கருதி, அவனையே நிந்தித்து, அவன் கையாலே மாண்டு, மீண்டும் அவனிடமே வந்தவர்கள்!

இருவரில் ஒருவனுக்கு மட்டும் அதீத வெறுப்பு (இரணியன், ராவணன், சிசுபாலன்)! இவனே முனிவரைச் சிறுவன் என்று எண்ணியவன் போலும்!

இதனாலேயே, எம்பெருமானைத் தீவிரமாக நிந்தை செய்வதையும் தியானம் என்கின்றனரோ!

சகோதரர்களில், இன்னொருவன் எம்பெருமானின் விரோதியாக இருந்தாலும் (இரணியாட்சன், கும்பகர்ணன், தந்தவக்ரன்), அதீத வெறுப்புக் கொண்டதாகக் கதை இல்லை!

சென்ற பாசுரத்தில், 'உளம் தொட்டு' என்றாரே ஆழ்வார்! அதற்கு இன்னொரு அர்த்தம்!

தான் தொட்ட உள்ளத்தில், பாசம் இருக்கிறதா என்று சோதித்தார்! தப்பித் தவறி இருந்து விட்டால், பின்னர் ஏழு பிறவி வந்து விடுமே! இரணியனே ஆனாலும், வைகுந்தத்தில் இருந்தவனாயிற்றே! எனவே, உடனே உள்ளத்தைச் சோதிப்பதை விட்டு, மார்பைப் பிளந்து, பிறவியில் இருந்து முக்தி அளிக்கிறார்!

***

’Back to the Future':

ஒவ்வொரு பாசுரத்திலும் ஒரு பூவைச் சொல்லி, 'உனக்கு இதைச் சூட்டுகிறேன், வா!' என்கின்றாள் யசோதை.

பலஸ்ருதி இல்லாத மிகச் சில திருமொழிகளில் இதுவும் ஒன்று!
யசோதையாழ்வார் எம்பெருமானுக்குச் சூட்டுவதாக, இந்தத் திருமொழியில் சொன்ன மலர்களில், துளசி இல்லை! ஏன் அவர் துளசியைச் சேர்க்கவில்லை என்பது யாருக்காவது தெரியுமா?

இந்தத் திருமொழி, தினமும் வைணவர்களால் பாராயணம் செய்யப் படவேண்டும் (நித்யாநுசந்தானத்தில் இந்தத் திருமொழி சேர்க்கப் பட்டுள்ளது)!


வீட்டில் மலர்கள் இல்லை என்றாலும், இந்தத் திருமொழியைச் சொன்னால், எம்பெருமானை மலர்களால் அர்ச்சனை செய்வதற்குச் சமம்!

வைணவக் கோயில்களில், திருமஞ்சன காலத்தில், இந்தத் திருமொழி சேவிக்கப் படுகிறது.

இந்தப் பாசுரத்தில், எம்பெருமானைப் பற்றி மேலும் விவரித்திருக்கிறார் ஆழ்வார். கண்டுபிடிக்கிறீர்களா?

- நரசிம்மர் மீண்டும் வருவார்

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP