Showing posts with label தொடை. Show all posts
Showing posts with label தொடை. Show all posts

Thursday, May 13, 2010

வளர்ந்த சிங்கம்



கு
ழந்தை, சுவரைப் பிடித்து எழுந்து நிற்க ஆரம்பித்தவுடன், மகிழ்ச்சியுடன் கைகொட்டிச் சிரிக்கும். இதைப் பார்க்கும் தாயும் சேர்ந்து, கை கொட்டி மகிழ்வாள். இந்தப் பருவத்தை, பிள்ளைத் தமிழில், சப்பாணிப் பருவம் என்பர்.


பெரியாழ்வார், கண்ணன் கைகொட்டிச் சிரிப்பதை அனுபவித்து, மாணிக்கக் கிண்கிணி எனும் (1-7) இயற்றியுள்ளார்.

இதில் 9-ம் பாசுரத்தில் நரசிம்மனை அழைக்கிறார்.

***
 
அளந்திட்ட தூணை* அவன் தட்ட* ஆங்கே
வளர்ந்திட்டு* வாளுகிர்ச் சிங்க உருவாய்*

உளந்தொட்டு இரணியன்* ஒண் மார்வகலம்*
பிளந்திட்ட கைகளால் சப்பாணி*

பேய்முலை உண்டானே! சப்பாணி.
மாணிக்கக் கிண்கிணி 1-7-9

தானே அளந்து கட்டிய தூணை இரணியன் தட்ட, அவன் தட்டிய இடத்திலேயே வளர்ந்து தோன்றி, ஒளி பொருந்திய நகங்களை உடைய சிங்க உருவாய், இரணியன் மார்பைத் தொட்டு, மார்பு முழுவதும் பிளந்த கைகளால், கை கொட்டிச் சிரி! பேய் முலை உண்டவனே! கை கொட்டிச் சிரி!'

என்று 'யசோதை'யாழ்வார் பாடுகின்றாள்.

***

ரசிம்ம புராணத்தில் இருந்து ஒரு காட்சி ...

இடம்: இரணியன் அரண்மனை
நேரம்: அவன் விதி முடியும் நேரம்

இரணியன் (கோபத்துடன்): மூடனே! எங்கே இருக்கின்றான் விஷ்ணு?

பிரகலாதன்: எல்லா இடத்திலும்!

இரணியன் (சிரித்து): இந்தத் தூணிலுமா?

(பிரகலாதன் கண்ணுக்கு மட்டும் எம்பெருமான் காட்சியளிக்கிறார்)


பிரகலாதன் (தூணைப் பார்த்து):
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா! உந்தன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா!

(எல்லாமே எம்பெருமான் தான் என்று
நினைக்கும் மனப் பக்குவம் வந்து விட்டால், கூப்பிடும்போது தான் நரசிம்மர் வரவேண்டும் என்ற அவசியம் இல்லையே!)


இரணியன் (சந்த்ரஹாசம் எனும் தன் கத்தியை எடுத்து):
பைத்தியமே! நான் சொல்வதை நன்றாகக் கேள்! உன்னை என் கையாலேயே வெட்டிக் கொல்வேன்!

(பிரகலாதனை, 'மூட:' என்று இரண்டு
முறை குறிப்பிடுகின்றான் இரணியன் இங்கு! பிரகலாதன் பைத்தியமா? யாராவது பதில் அளிக்கிறீர்களா?)

இரணியன் (ஒரு தூணைக் காட்டி): முடிந்தால் இந்தத் தூணில் இருந்து விஷ்ணு வந்து உன்னைக் காப்பாற்றட்டும்!

ஓஹோ! 'அளந்திட்ட தூண்' இது தானோ?

***

ந்தத் தூண், சாதாரணத் தூண் அல்ல!

நாம் ஒரு வீடு கட்ட ஆரம்பிக்கிறோம்! பூஜை செய்து, அதில் முதல் கல்லை மட்டும், நாம் எடுத்து வைக்கிறோம்! மற்றதெல்லாம் கொத்தனார் வேலை. ஆனாலும், நம் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் 'நான் கட்டிய வீடு' என்று சொல்லிப் பெருமை கொள்கிறோம்!


('ராமர் பொறியியல் கல்லூரியில், B.E Degree வாங்காமல், சேது பந்தனம்' கட்டியதும் இப்படித் தானே?)


இப்படி, இரணியன், முதலில் 'அளந்து இட்ட' தூணாம் இது! அதுவும், தன் உருவத்திற்கு ஏற்பக் கட்டிய, மிகப் பெரிய, உயரமான, அழகான தூண்!

ஆனால், ஆழ்வார் கூறும் காரணம் இதுவல்ல!
 
தானே நட்டு வைத்த, பார்த்துப் பார்த்துக் கட்டிய இந்தத் தூணில், 'நாராயணன் முன்னமேயே வந்து ஒளிந்து கொண்டு இருக்க முடியாது' என்ற நம்பிக்கையிலேயே!

ஒரு வேளை, 'தன் விதி இது தான்' என்று முன்னமேயே இரணியன் (வரங்களின் மூலம்) அளந்து வைத்த தூண் என்கின்றாரோ ஆழ்வார்?

இன்னொரு தனிச் சிறப்பு - தசாவதாரக் கதைகளில் இன்னமும் சான்றாக இருப்பவை, அநேகமாக இந்தத் தூணும், சேது பந்தனமும் தான்! அதிலும், திவ்ய தேசம், இந்தத் தூண் ஒன்று தான்!


அன்பர்களுக்கு ஒரு விண்ணப்பம்:
கப்பல்களும், மற்றவையும் வந்து, அவை இரண்டும் அழிவதற்கு முன்னர், முடிந்தால் நீங்கள் நேரில் சென்று தரிசனம் செய்து விடுங்கள் - இதுவரை தரிசனம் செய்யாமல் இருந்தால்!

முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தூணைத் தட்டுகிறான் இரணியன்!

***

ரசிம்மம் தோன்றுகிறது! தட்டிய இடத்தில் இருந்து!


'நாளைக்கு வருகிறேன்!' என்று எம்பெருமான் பாற்கடலில் தூங்கிக் கொண்டு இருக்க முடியுமா? அதற்குள் இருக்கிற ஒரே பக்தனையும் இரணியன் கொன்று விடுவானே!
 
நரசிம்மம், அப்பொழுதே தோன்றியது!

'ஆங்கே' என்பதற்கு, 'அந்த இடத்திலேயே, அப்போழுதே' என்ற இரு பொருளும் உண்டு!
 
இதனாலேயே பெரியோர்கள் 'நாளை என்பதே நரசிம்மத்துக்குக் கிடையாது!' என்பர். அவனுடைய நாமத்தைச் சொல்லுங்கள்! கேட்டவுடன், உடனேயே கிடைக்கும் நரசிம்மனிடம் இருந்து!

'வளர்ந்திட்டு' என்கிறாரே? சிங்கம் வளர்ந்ததா?

***

ல்லா நரசிம்மாவதாரக் காவியங்களும், 'நரசிம்மர் தூணைப் பிளந்து வந்து இரணியனை வதம் செய்தார்' என்று கூறினாலும், உண்மையில் அவதாரம் முழுவதும் பல நிலைகளில் (Stages) வர்ணிக்கப் படுகின்றன:
 
- தூண் பிளந்ததும், வந்த சிங்க உரு!
- உடனே எடுத்த விசுவ ரூபம்!
- இரணியனுடன் இருந்த அசுரர்கள் வதம்!


- இரணியனுடன் போர்!
- அந்திப் போதில், இரணியனின் மார்பு பிளந்தது!
- எம்பெருமானின் கோபம்!
- கோபம் தணிந்ததும் நடந்தவை!


படைப்பாளியின் கற்பனைக்கு ஏற்ப, வர்ணனைகளில் சில நிலைகள் குறைவாகவும், சில நிலைகள் அதிகமாகவும் உள்ளன.

தூணில் இருந்து வெளிவந்தவுடன், நரசிம்மம் விசுவரூபம் எடுத்ததாகவும் கூறுவர். இதனாலேயே ஆழ்வார் 'வளர்ந்திட்டு' என்கின்றாரோ?

கம்பரின் விசுவரூப வர்ணனையையும், மற்ற காவியத்தில் உள்ள வர்ணனைகளையும், முழுவதும் நாம் பின்னால் ரசிக்கலாம்.

('பின்னால், பின்னால்' என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போனால் என்ன அர்த்தம் என்கிறீர்களா? அடியேன் கிட்ட இருக்கிற மொத்தச் சரக்கையும் 90+ பாசுரங்களுக்கு ஏற்கனவே கூறு போட்டுட்டேன் சாமி ... ஹி... ஹி...)

எம்பெருமான், சங்கு சக்கரங்களுடன் தோன்றியதாகக் கூறுவர். இருந்தும், அவதாரக் காரணம் கருதி, அவற்றின் ஒளியை விட அவருடைய நகங்கள் மிகவும் ஒளி பொருந்தியதாக இருந்ததால், சங்கு சக்கரங்களைப் பற்றி விவரிக்காமல், 'வாள் உகிர்ச் சிங்க உரு' என்கிறார்.

நரசிம்மம் மார்பைத் தானே தொட்டது? 'உளம் தொட்டு' என்கின்றாரே, ஏன்?

***

ட்டிய இடத்தில் இருந்து, அப்பொழுதே தோன்றும் எம்பெருமானைப் பார்த்தாவது, இரணியன் திருந்துவானா என்று எம்பெருமான் நினைத்தாராம் (திருந்தினால், இன்னும் ஒரு பக்தன் கிடைப்பானே என்ற நப்பாசை தான்)! எனவே, அவன் உள்ளத்தைத் தொடுகின்றார் ('உளம் தொட்டு')!

நன்கு தேடியும், எம்பெருமான் மேல் பாசம் சிறிதும் இல்லையாம் இரணியனுக்கு! அவன் திருந்துவதாகத் தெரியவில்லை. உடனே, உள்ளத்தை விட்டு விட்டு, பிளக்கிறார் மார்பை!

ஒண் மார்வகலம் பிளந்திட்ட’ - மார்பை, அகலமாகப் (முழுவதுமாக) பிளக்கின்றார் எனவும், அகலமான மார்பைப் பிளக்கின்றார் எனவும் பொருள் கொள்ளலாம்.

அன்று ஆயுதமாக இருந்த அதே கைகள், இன்று, கை கொட்டிச் சிரிக்கின்றதாம்! சிரிக்க வைக்கின்றதாம்!

ஐயோ! மீண்டும் பூதனையா? ஆழ்வாருக்கு பூதனையை ரொம்பப் பிடிக்குமோ?

***

பூதனையும், இரணியனும் ஒரே குலமாம் - அசுரர்கள் என்பதற்கும் மேலாக!

இருவரும் - ’தொடை’க்குலமாம் (!?!)

ஒருத்தியை, அவள் தொடைகளில் படுத்து, உயிரை எடுக்கின்றான்! ஒருவனை, தன் இரு தொடைகளில் கிடத்தி, அவன் உயிரை எடுக்கின்றான்!


ஒரு தொடையில் நிலமகளைப் பிரளயத்தி லமர்த்தினை*
இரு தொடையில் இருத்திநீ அவுண னுடல் பிளந்தனை*

ஒரு தொடையில் பத்தனை வதத் தின்பின் அமர்த்தினை*

இரு தொடையில் கிடந்துநீ யரக்கி உயிர் குடித்தனை*

ஒரு தொடை தட்டிநீ பாரதப் போர் முடித்தனை*

ஒரு தொடையில் திருமகளை இடந்தையி லமர்த்தினை*

ஒரு தொடைத் துளவம் தந்த அடிப்பொடிக் கருளினை*

ஒரு தொடை யலங்கார மெழுது மடியேனுக் கிரங்காயோ?


பாரதத்தில், தன் தொடையைத் தட்டி, பீமனுக்கு சமிக்ஞை செய்கிறான்! துரியோதனன் மரணத்துடன் போர் முடிகின்றது!

திருமகளையும், நிலமகளையும், பிரகலாதனையும் தன் இடப்பாகத்தில் அமர்த்துகின்றான்!

என்ன? ’தொடை’க்குலம் என்பது சரி தானே?

- நரசிம்மனே போற்றி!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP