Sunday, May 16, 2010

தசாவதார நரசிம்மன்


முந்தைய பாசுரத்தில், நரசிம்மனே வாமனனாய் வந்து காட்சி தரும் கோயில் அரங்கம் என்றார்.

ஆனால் அடுத்த பாசுரத்தில்?

***

தேவுடைய மீனமாய் ஆமையாய்* ஏனமாய் அரியாய்க் குறளாய்*
மூவுருவில் இராமனாய்* கண்ணனாய் கற்கியாய் முடிப்பான் கோயில்*
சேவலொடு பெடை அன்னம்* செங்கமல மலர் ஏறி ஊசலாடி*
பூவணைமேல் துதைந்து எழு* செம்பொடி ஆடி விளையாடும் புனலரங்கமே.
மரவடியை 4-9-9

அருள் உடைய மீனாக, ஆமையாக, வராகமாக, நரசிம்மமாக, வாமனனாக, மூன்று உருவில் ராமனாக, கண்ணனாக, கல்கியாக வந்து, தீயோரை அழிப்பவனுடைய  கோயிலானது,

ஆண் அன்னத்துடன், பெண் அன்னம், தாமரை மலர் மீது ஏறி, ஊஞ்சல் ஆடி, மலர்ப் படுக்கையில் ஒன்றோடு ஒன்று கலந்து இருந்து, மலரிலிருந்து எழுந்த மகரந்தப் பொடிகளைப் பூசிக்கொண்டு விளையாடுவதற்கு இடமான, நீர் வளம் மிக்க அரங்கமே!

(தேவுடைய = தே + உடைய = அருள் உடைய; சேவல் - ஆண் அன்னம்; பெண்; பெடை -ஊசல் - ஊஞ்சல்; பூவணை = பூ + அணை - மலர்ப் படுக்கை; துதைந்து - ஒன்றோடொன்று கலந்து; செம்பொடி - செந்தூரப் பொடி; புனல் - நதி, நீர்)

***

திருமால், ராமன், கூர்மம், இருக்குமிடம் அரங்கம், நரசிம்ம வாமனன் இருக்குமிடம் அரங்கம், என்று எழுதிக் கொண்டிருந்த பெரியாழ்வாருக்குத் தலை சுற்ற ஆரம்பித்தது!

பத்து அவதாரங்களுக்கும், எல்லா Combination-களையும் போட ஆரம்பித்தால் குறைந்தது 10C2 (=45) பாசுரங்களாவது எழுத வேண்டுமே?

யோசித்த ஆழ்வார், தசாவதாரப் பெருமான்கள் எல்லோரும் இருக்குமிடம் அரங்கம் தான் என்று, இரண்டே வரியில் அழகாகப் பாடி முடித்து விட்டார்! நாமும் ஒரு தசாவதாரப் பாசுரம் கிடைக்கப் பெற்றோம்!


(மங்கையாரும் ஒரு தசாவதாரம் பாசுரம் எழுதியுள்ளார் - மீனோடாமை - பெ.தி.8-8-10)

நமக்கு அருள் செய்வதற்காகவே, மீனாய் அவதாரம் எடுத்து, வேதங்களை அருளிச் செய்கிறான்! எனவே, அருள் உடைய மீன் இது! 'தேவுடைய மீன்'!

மீன் மட்டும் தான் தேவுடையதோ? 

தேவுடைய = தேவு + உடைய. 'தேவு' என்பது, 'தேஜஸ்' என்னும் வடமொழிச் சொல்லின் திரிபு. ஒளி உடைய மீன்! 

தேவுடைய - அவனே ஒளியுடையவனாய்ப் பிறக்கிறான்! அவன் ஒளி பெறுபவனாகவே இருக்கிறான்! அவன் பிறந்தே நமக்கு ஒளி கொடுக்கிறான்!

இவன் தானே 'ஆதியஞ் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன்' (திருவாய்மொழி 2-5-5)!

மீன் மட்டும் தான் ஒளி உடையதா? எல்லா அவதாரங்களும் தானே! எனவே, தேவுடைய மீன், தேவுடைய ஆமை என்று, எல்லா அவதாரங்களுக்கும் இந்த வார்த்தையைச் சேர்த்தும் பொருள் கொள்ளாலாம்!

தேவுடைய நரசிம்மன்! இவன் ஒளி, பற்களாலும், நகங்களாலும்! இவனை நாம் இப்பொழுது அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோம்!

மூவுருவில் - மூன்று உருவில் (ஏதுப் பொருளில் வந்த ஐந்தாம் வேற்றுமை) ராமன்! பரசுராமன், ஸ்ரீராமன், பலராமன்! 'கல்கியாய் முடிப்பான்' அரங்கன்! அருள் கொடுக்கும் அரங்கன் அழிக்கலாமோ?

அவன் அழிப்பது நம்மையல்ல! கலியுலகின் முடிவில், பெருகும் அதர்மத்தை முடிப்பவன்! யஸஸ் எனும் பிராம்மணரின் மகனாய், கையில் சங்கு சக்கரத்துடனும், குதிரை வாகனமாய், நாந்தகம் (கத்தி) ஏந்தி வருவான் அவன்!

அந்த நேரத்தில் நாம் இல்லாமல் போனாலும் பரவாயில்லை!

இப்பொழுதே அரங்கனைச் சேவித்து விடுங்கள்! அரங்கனைச் சேவித்தால், கல்கியைச் சேவித்தது போல் ஆயிற்று என்கின்றார் ஆழ்வார்! 

ஒரு கதை கேளுங்கள்!

***

இடம்: ஸ்ரீ வில்லிபுத்தூர்
நேரம்: காதல் நேரம்
மாதம்: தை மாதம்

(ஒரு பெண், தனியாகப் புலம்பிக் கொண்டு இருக்கிறாள்)

பெண்: பிரிந்தவர்களைச் சேர்த்து வைக்கும் மன்மதா! உன்னை வணங்குகிறேன். எனக்கு உதவி செய்!

மன்மதன் (நேரிலே தோன்றி): என்ன? தை மாதமாயிற்றே! பொங்கல் கரும்பு வேண்டுமா? என்னிடம் ஒரு கரும்பு வில் தானே உள்ளது! 

பெண்: விளையாடாதே! என்னை வேங்கடவனுடன் சேர்த்து வை! 

மன்மதன்: யார்! அந்த ஏழு மலையானிடமா?

பெண்: பின்னே! மனித வேங்கடவனா? மனிதக் கல்யாணம் என்ற பேச்சு எழுந்தால் நான் உயிர் தரிக்க மாட்டேன்! 

மன்மதன்: ஐயோ! ஆளை விடு! ஏற்கனவே ஒரு திவ்ய தம்பதிகளைச் சேர்த்து வைக்கப் போய், நான் முழுவதும் எரிந்து விட்டேன்!

(மறைந்து விடுகிறான்)

(இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு தோழி, வேகமாக ஓடிச் சென்று, கோயிலில் உறங்கிக் கொண்டிருக்கும் வடபத்ர சாயியிடம் கோள் சொல்ல, அவர் புலம்புகிறார் '... நான் அல்லவா தினமும் அவள் சூடிய மாலையை அணிந்து கொள்கிறேன். இவள் வேங்கடவனைக் கேட்கிறாளே!')

***

இடம்: வீட்டுத் தோட்டம்
நேரம்: காலை நேரம்
காலம்: மார்கழி மாதத்திற்கு முன்

(இந்தப் பெண்ணின் காதல் முற்றுகிறது. எம்பெருமான் அவளைக் கல்யாணம் செய்து கொள்வதாகக் கனவு காண்கின்றாள். அதே கனவு, பெண்ணின் தந்தைக்கும் வருகின்றது. விடிந்தவுடன், பெண்ணும், தந்தையும் பேசிக் கொள்கின்றனர்)

தந்தை: பெண்ணே! நீ யாரை மணமுடிக்க விரும்புகிறாய்?

பெண்: மணிவண்ணனையே மணாளனாக மணமுடியுங்கள்!

 
தந்தை (அதிர்ச்சி அடைந்தாலும்): சரி! அந்த மணாளன் எந்த ஊரான்? எந்த அவதாரம்?

பெண்: தந்தையே! மணிவண்ணன் அவதாரங்களையும், ஊர்களையும்ன் விளக்குங்கள்!

(தந்தை விளக்க ஆரம்பிக்கிறார்)

தந்தை: வாமனனைப் பிடிக்குமா?

 
பெண்: வேண்டாம்! அவன் என்னை விட உயரத்தில் சிறியவன்!

தந்தை: சரி, பலராமனைப் பிடிக்குமா?

பெண்: வேண்டாம்! அவன் ஞானி! நமக்கும் அந்த அறிவுக்கும் ஒத்து வராது! மேலும், அவன் எப்பொழுதும் கலப்பையுடனேயே வயல்களிலேயே திரிவான். அவன் பின்னால் காலில் செருப்பும் இல்லாமல் என்னால் ஓட முடியாது!

தந்தை: ராமனைப் பிடிக்குமா?

பெண்: அவர் ஏக பத்தினி விரதர்! என்னைக் கல்யாணம் செய்ய மாட்டார்!

தந்தை (அலுப்புடன்): கண்ணன்?

பெண்: அவனை எனக்குப் பிடிக்கும்! இருந்தாலும் அவனுக்கு ஏற்கனவே என்னைப் போலவே 14,000 மனைவியர்!

தந்தை: வேங்கடவன்?

 
பெண்: வேண்டாம்! அவனைப் பார்க்கவேண்டும் என்றால் கூட, கையில் Badge கட்டிக் கொண்டு, 3 மாதம் முன்னாலேயே Booking பண்ணி, வைகுந்த வாசலில் நுழைந்து, வரும் VIP-களுக்கும், அவர்களுடைய வேலைக்காரர்களுக்கும், உறவினர்களுக்கும் வழி விட்டு, 20 மணி நேரம் Queue-வில் நின்று, கடைசியில், ஜய, விஜயர்களுக்கு அருகே வந்து கை கூப்புவதற்குள், 3-4 பேர், புரியாத பாஷையில், பிடித்துத் தள்ளிவிடுவார்கள்!

 
தந்தை (எரிச்சலுடன்): பின்னே என்ன தான் செய்யச் சொல்லுகிறாய்? 

பெண்: அப்பா! ஒவ்வொரு திவ்ய தேசப் பெருமாளையும் பற்றிச் சொல்லுங்கள்!

(தந்தை, மிகவும் பொருமையாக விளக்கத் தொடங்குகின்றார்) 

தந்தை: திருக்கோட்டியூர் ஸெளம்ய நாராயணன்?

பெண்: அவர் அழகு தான்! இருந்தாலும், அவர் வீட்டில் எப்போதும் தேவர்கள் ஒளிந்து கொண்டு இருப்பர்! Privacy கிடைக்காது! வேறு வரன் உள்ளதா?
தந்தை: பத்ரி நாராயணன்? 

பெண்: அவர் 1,000 வருடங்களுக்கு ஒரு முறை தவம் செய்யப் போய்விடுவார்! வேண்டாம்! 

தந்தை: கடிநகர் (தேவப் ப்ராயாக்) புருஷோத்தமன்? 

பெண்: அப்பா! தென் திருப்பதி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்! என்னால் அடிக்கடி கோபித்துக் கொண்டு வட நாட்டில் இருந்து இங்கே வர முடியாது! மேலும், மாப்பிள்ளை பெயர் வடமொழிப் பெயராக இருப்பதால், கல்யாண செலவிற்கு Discount கிடைக்காது!

தந்தை: பிரகலாத வரதன்? 

பெண்: அப்பா! பிரகலாதன் மாதிரி யாராவது கூப்பிட்டால், என்னை விட்டு விட்டு, உடனே தூணிற்குள் ஒளிந்து கொள்ளப் போய்விடுவார் இவர்! தாயாரே இவரைப் பார்க்க பயப்படும்போது, நான் மட்டும் பயப்பட மாட்டேனா?

(பல திவ்ய தேசங்களையும், அவதாரங்களையும், கழித்து விடுகின்ற பெண்ணைக் கண்டு, கோபமும், ஆத்திரமும், எரிச்சலும், வருத்தமும் வருகின்றது தந்தைக்கு ... புலம்புகிறார் ... 'உனக்குத் தாய் இல்லையாதலால், பெண் மனது அறியாமல் வளர்த்து விட்டேன்! என் தவறு அது! இதற்குத் தகுந்த தண்டனை எனக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது’) 

தந்தை: இன்னும் ஒரே ஒருவன் தான் இருக்கின்றான்! அவனையும் பிடிக்கவில்லை என்றால், அவன் தான் உன்னையும் என்னையும் கடைத்தேற்ற வேண்டும்!

பெண்: யார் அப்பா அந்த ஒருவன்?

தந்தை: அழகிய மணவாளன்!


 
பெண்: பெயரே அழகாக இருக்கின்றது! அவன் பெருமைகளைச் சொல்லுங்கள் அப்பா!

தந்தை (பாடுகிறார்):

ஆமையாய்க் கங்கையாய்* ஆழ்கடலாய் அவனியாய் அருவரைகளாய்*
நான்முகனாய் நான்மறையாய்* வேள்வியாய்த் தக்கணையாய்த் தானுமானான்*
...

உலகில் உள்ள எல்லாப் பொருட்களும், மனிதர்களும், தெய்வங்களும் அரங்கத்தில் இருக்கும் அவனே! 

பெண்: அடேயப்பா! இவ்வளவு பெருமைகளா? மேலும் சொல்லுங்கள் அப்பா!

தேவுடைய மீனமாய் ஆமையாய்* ஏனமாய் அரியாய்க் குறளாய்*
மூவுருவில் இராமனாய்* கண்ணனாய் கற்கியாய் முடிப்பான் கோயில்*
... 

எல்லா அவதாரங்களும் இருக்கும் கோயில் அரங்கமே!

பெண் (முகம் சிவந்து): இன்னும் ஏதாவது?



தந்தை (மகள் முகம் நோக்கியதும் தன் முகத்தில் சிரிப்புடன்): இந்தத் திருப்பதியைத் தொழுதால், தென் நாட்டுத் திருப்பதியும், வட நாட்டுத் திருப்பதியும் தொழுதது போல் ஆகும்!

(வெட்கத்தில், பேச இயலாத பெண்ணைக் கண்டு, தந்தையின் முகத்தில் சிரிப்பு! அதையும் மீறி, இந்தத் திருமணம் எப்படி நடக்கும் என்ற கவலை!)

இப்படி, ஆண்டாளுக்காகப் பெரியாழ்வார், அரங்கன் பெருமைகளைச் சொல்லி, தேர்ந்தெடுத்த மணவாளன் வாழுமூர்! தசாவதாரமும் இருக்கும் ஊர்! அரங்கம்!

Over To பாசுரம்!
***

ண் அன்னம், தன் பெண் அன்னத்துடன் விளையாட இடம் தேடுகின்றது! காவிரியின் கரையில், தாமரை மலர்களைப் பார்த்தவுடன், இரண்டும் மலர்களின் மீது ஏறி விளையாடுன்றன! மெல்லிய காற்றினால் அசையும் தாமாரை மலர்த் தண்டுகளுடன், அன்னங்களும் ஊஞ்சலாடுகின்றன!

இரவு வந்து விடுகின்றது! தாமரை மலரிலேயே அன்னங்கள் தூங்கிவிடுன்றன! மலர்ப் படுக்கையாயிற்றே! இரவில் புரண்டு படுக்கும்பொழுது, மலர்களில் உள்ள மகரந்தச் செம்பொடி, அன்னங்களின் உடல் மீது சேர்ந்து, அன்னங்கள் சிவப்பு நிறமாய்க் காட்சியளிக்கின்றன!



இப்படி, சிவந்த அன்னங்கள் விளையாடும் இடம், குளிர்ந்த அரங்கமே!

இங்கு, தசாவதாரங்களுடன், ஹம்ஸ (அன்னம்) அவதாரமும் பேசப்படுகின்றது!

'தேவுடைய' (இன்னமுமா?) எம்பெருமானாக இருப்பதற்குக் காரணம், அவனுடன் இருக்கும் திருவே என்கின்றார். எனவே தான் சேவலுடன், பெடையும் (பெண் அன்னம் - திரு) இருக்கின்றதாம்!

- தசாவதார நரசிம்மன் மீண்டும் வருவார்!

1 கருத்துகள்:

Rangan Devarajan said...

அன்பர்களே

இந்தப் பதிவு, மாதவிப் பந்தலில் முன்னரே அடியேனால் எழுதப் பட்டது. இதற்கான Comments அங்கு உள்ளன.

அங்கு சென்றால், தங்கள் எண்ணங்களுடன், மற்ற அடியவர்களின் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.



  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP