Friday, May 14, 2010

திருக்கோட்டியூர் நரசிம்மன்


தற்கு முந்திய இரண்டு திருமொழிகளில் (4-2, 4-3), திருமாலிருஞ்சோலையில் (மதுரை அழகர் கோயில்) வசிக்கும் எம்பெருமானை ரசித்த பெரியாழ்வார், அடுத்து, திருக்கோட்டியூர் எம்பெருமானை ரசிக்கிறார்.

திருக்கோட்டியூர் எம்பெருமானை, மனம், மொழி, உடலால், 'நாவகாரியம்' (4-4) எனும் திருமொழியில் எம்பெருமானை அனுபவிக்கின்றார் பெரியாழ்வார். இப்படி, தன்னைப் போல் எம்பெருமானை அனுபவிக்காதவரை, பழிக்கவும் செய்கிறார் இத் திருமொழியில்.

இதில், நரசிம்மனை, 2 முறை அழைக்கிறார்.

***

பூதம் ஐந்தொடு, வேள்வி ஐந்து* புலன்கள் ஐந்து, பொறிகளால்*
ஏதமொன்றும் இலாத* வண் கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர்*
நாதனை, நரசிங்கனை* நவின்று ஏத்துவார்கள் உழக்கிய*
பாததூளி படுதலால்* இவ்வுலகம் பாக்கியம் செய்ததே.
நாவகாரியம் 4-4-6
 
ஐந்து பூதங்களாலும், ஐந்து வேள்விகளாலும், ஐந்து புலன்களலும், ஐந்து பொறிகளாலும், சிறிதும் குற்றமில்லாத உதாரமான கைகளை உடையவர்கள் வாழும் திருக்கோட்டியூரில் எழுந்தருளியுள்ள தலைவனாகிய நரசிம்மனைத் துதிக்கும் அடியவர்களின் திருவடிகள் பட்ட தூசிகள் (உலகத்தில் அங்குமிங்கும்) படுவதால் இந்த உலகம் பாக்கியம் செய்தது.


(ஐந்து பூதங்கள் - நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்; ஐந்து வேள்வி - பிரம்ம, தேவ, பூத, பித்ரு, மனித வேள்விகள்; ஐந்து புலன்கள் - மெய், வாய், கண், மூக்கு, செவி; பொறிகள் - சுவை, ஒலி, ஊறு, ஓசை, நாற்றம்; ஏதம் - குற்றம்; வண்கையினர் - உதாரமான கைகள் உடையவர்கள்; உழக்கிய - மிதித்த; தூளி - தூசி)

***

ந்து பூதங்கள் - பஞ்ச 'மஹா' பூதங்கள் - இந்த அகிலத்தின் எந்தப் பொருளும், உயிரும், இந்த ஐந்தின் கலவையே! இவையே உலகின் ஆதாரம் (நம் உடலும் தான்)! எனவே, இந்த ஐந்தைத் தான் முதலில் கூறுவர் பெரியோர்!

பிரம்ம வேள்வி - வேதம் ஓதுதல்
தேவ வேள்வி - வேள்வித் தீயில் உணவில் ஒரு பகுதியை இடுதல்
பூத வேள்வி - நாய், பூனை, காக்கைக்கு உணவிடுதல்
பித்ரு வேள்வி - தர்ப்பணம் செய்து உணவின் ஒரு பகுதியை அளித்தல்
மனித வேள்வி - விருந்தினருக்கு உணவளித்தல், தானம் செய்தல்.
 
புலன்கள் ஐந்து! பொறிகள் எத்தனை? புலன்கள் ஐந்திற்கும், ஒவ்வொரு கடமை! உணர்வது! எனவே, பொறிகளை 'ஐந்து' என்று சொல்லாமல் விட்டு விட்டார்! 
 
ஆழ்வார் ஐந்து பூதங்கள் என்றது, அவைகளால் ஆன நம் உடலையே! இந்த உடலினால் நாம் என்ன செய்ய வேண்டும்?

'இது என்ன அபத்தமான கேள்வி - நல்லா சாப்டு, தூங்கி, 'TV' பார்த்து, 'Party'-களுக்குச் சென்று, 'Enjoy' பண்ணனும்னு தானே!' என்கிறீர்களா?

தொண்டரடிப்பொடியாழ்வார் இதற்குப் பதில் சொல்வார்!

***
 
வண்டினம் முரலும் சோலை* மயிலினம் ஆலும் சோலை*
கொண்டல் மீதணவும் சோலை* குயிலினம் கூவும் சோலை*
அண்டர் கோன் அமரும் சோலை* அணி திருவரங்கம் என்னா*
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி* நாய்க்கு இடுமினீரே!
திருமாலை-14

மூன்றாவது வரியின் கடைசியில், 'திருவரங்கம் என்னா மிண்டர்' என்கின்றாரே? இதற்கு என்ன அர்த்தம்?

எம்பெருமான் கொடுத்த வாயினால், நாம் 'அரங்கா!' என்று கூடச் சொல்ல வேண்டாமாம்! அணி அரங்கம் என்று, அவன் இருக்கும் ஊரின் பெயரைச் சொன்னாலே போதுமாம்!
 
அப்படிச் சொல்லவில்லை என்றால், அவர்கள் நன்றி கெட்டவர்களாம் (மிண்டர்கள்)! அவர்களுக்கு, வாய் இருந்து பயனில்லையாம்! அவன் பெயர் சொல்லாதவர்கள் (வாயினால்) உண்ணும் சோற்றை விலக்கி, நாய்க்கு இடுங்கள் என்கின்றார்!

ஏன் நாய்க்கு இட வேண்டுமாம்? ஒரு நாள் சோறு போட்டாலே நாய், போட்டவரிடம் நன்றியுடன் இருக்குமே! 'மிண்டர்களை விட, நாய்கள் எவ்வளவோ மேல்!' என்கின்றார்!

இனி, குறைந்தது 'அரங்கா' என்று சொல்லி விட்டாவது 'Party'-க்குச் செல்லலாமே :-)

***

ந்து பூதங்களை - உடலை - முதலில் கூறிய பெரியாழ்வார், பிறகு, அவற்றினால் செய்ய வேண்டியதாக, வேள்விகளைச் சொல்லுகிறார்!

'உடலைப் பெற்ற நீங்கள், அதனால் எம்பெருமானை வழிபடுங்கள்! நம் முன்னோர்களை நினையுங்கள்! தான தர்மம் செய்யுங்கள்!' என்கின்றாரோ?

வேள்விகளுக்குப் பிறகே, நம் புலன்கள், பொறிகள் செய்யும் மற்ற கடமைகளைக் கூறுகின்றார்!உடலாலும், புலன்களாலும், பொறிகளாலும், செய்ய வேண்டியதைச் செய்து வந்தவர்களே 'குற்றம்' ஒன்றும் இல்லாத நல்ல கைகளை உடையவர்களாம் ('ஏதம் ஒன்றுமிலாத வண்கையினார்கள்' என்று, திருக்கோட்டியூர் செல்வ நம்பியையும் சேர்த்துச் சொல்வதாக ஒரு வியாக்கியானம் உண்டு)!

திருமாலிருஞ்சோலை

திருக்கோட்டியூரில் தேவர்களுக்குத் தலைவனான நரசிம்ம மூர்த்தியும் இருக்கிறான்! இப்படி, 'நல்ல கைகளும்', நரசிம்மனும் சேர்ந்து இருப்பதாலேயே (முந்திய இரு திருமொழிகளில் [4-2, 4-3] பாடிய திவ்ய தேசமான திருமாலிருஞ்சோலையை விட) திருக்கோட்டியூர் திவ்ய தேசம் அதிகம் பெருமை உடையதாயிற்றாம்!

திருக்கோட்டியூர்

திருக்கோட்டியூரில் நரசிம்மனா? இது என்ன புதுக்கதை?

***

து ஒன்றும் புதுக் கதை இல்லீங்னா! பெரியாழ்வார், 'நீ முன்னால ஆரம்பிச்சு, நிறுத்தின பழைய கதையை இப்ப 'Continue' பண்ணு; எல்லாம் அடுத்த பாசுரத்தில் 'Adjust' ஆயிரும்' என்று அடியேனுக்குக் கொடுத்த தைரியம் தாங்னா!

இடம்: இரணியன் அரண்மனை
காலம்: 'Advice' காலம்
நேரடி வருணனை: செவ்வை சூடுவார்

 
(ஜய விஜயர்கள், இரணியகசிபு, இரணியாட்சன் எனும் பலமுள்ள அசுரர்களாக வளர்கின்றனர். வராக உரு எடுத்து வந்த பரந்தாமன் இரணியாட்சனைக் கொல்கிறார். கோபமடைந்த இரணியன், அசுரர் தலைவர்களைத் தன் அரண்மனைக்கு அழைத்துப் பேசுகின்றான்)

'தரையின் மீது போய், "மாயவன் உரு" எனச் சாற்றும்
அரிய வேள்வியே முதலிய அறங்களை அழித்து,
புரியும் அந்தணர் பொன்று உற புரிமினோ!;
புரியின், கரிய வன் வலி கெடு உலப்பார் கடவுளரே'.

(தேவர்களுக்கு பலம், மனிதர்கள் வேள்வியில் கொடுக்கும் அவிர்பாகம் தான்! அவற்றைத் தடுங்கள்! தேவர்கள் சக்தி குறைந்து விடும்! பின்னர் நாம் அவர்களை வெல்லலாம்!)

மாபுரங்களை அழித்தனர் சிலர்; பல மணி சேர்
கோபுரங்களை தகர்த்தனர் சிலர்; சிலர் குழுமி
தூபுரங்கள் சூழ் பதத்தினர் நொவ்வுற அலைத்தார்;
ஆபுரங்களைக் செகுத்தனர் சிலர், வெகுண்டு அடர்த்தே.

(உடனே அசுரர்கள் பூமியில் உள்ள நகரங்களை அழித்து, கோயில்களைத் தகர்த்தனர்; தேவ மாதரைத் துன்புறுத்தினர்; பசுக்களைக் கொன்றனர்)

இரணியன் அசுரனாயிற்றே? அடுத்து என்ன செய்ததாக நம் வர்ணனையாளர் கூறுகின்றார்?

***

ம்பி மனைவியான ருஷாபானுவும், அவளுடைய 7 மக்களும் அழுகின்றனராம்! இதைப் பற்றிக் கவலைப் படாது, தம்பி மனைவியை அபகரிக்க நினைக்கிறானாம் இரணியன்! ஆனால் தன் தாயான திதியும் அழுவதால், எல்லோரையும் மயக்க, அவர்களுக்கு 'உபதேசம்' செய்கிறானாம் இரணியன்!


'சுயக்ஞன் எனும் அரசன் போரில் கொல்லப்பட, அவன் உறவினர் அழுகின்றனர். யமன் அங்கு தோன்றி அவன் உறவினருக்கு உபதேசம் செய்கிறான் (இதற்குப் பெயர் தான் Advice-க்குள்-Advice)!

'கண்ணி வீழ்ந்து; அதன் பெடையினை கலந்து அழுகுலில், இங்கு அம்
மண்ணின் வீழ் தர, மாய்த்தனன் வாங்குவில் வேடன்;
எண்ணி மாய்ந்தவற்கு இரங்கல் என்? இறக்கும் இவ்வுடல்;' என்று
அண்ணல் நல்லறக் கடவுள் சொற்றனன்; அவர் தெளிந்தார்.

(உடம்பு என்று இருந்தால், என்றாவது இறக்கும். அதனால், 'அழுகாச்சியை' விட்டு, அடுத்த வேலையைப் பார்!)

(மீண்டும் வர்ணனையாளர் தொடர்கிறார்)

'அன்னை நீ துயர் நீங்கு' என அறைதலும், திதிதான்
இன்னல் தீர்ந்தனள்; இருந்தனள்; இரணியன் ஏகி,
மின்னின் மாய் உடல் விளிவுறா வரம் பெறல் வேண்டி,
மன்னு மாதவம் வளர்ப்ப நன் மந்தரத்து அடைந்தான்.

(இதைக் கேட்ட திதிக்கு மனம் தெளிகிறது; இரணியன், இறக்காமல் இருக்க வரம் வேண்டி தவம் செய்ய மந்தர மலை அடிவாரம் செல்கிறான்)

இத்துடன், பெரியாழ்வார் கதையை நிறுத்தச் சொல்கிறார் ... ஹி ... ஹி ...!

***

ந்த நரசிம்ம மூர்த்தியைப் பார்க்க வருகின்றார்களாம் அடியவர்கள்!

ஏற்கனவே திருக்கோட்டியூருக்குச் சிறப்பு நரசிம்மாரால்! அதிகம் சிறப்பு 'நல்ல கைகளால்'! இன்னும் சிறப்பு, நரசிம்மன் பெயரைச் சொல்லும் அடியவர்களின் பாத தூளி திருக்கோட்டியூரில் இருந்து, இந்த உலகத்தில் படுவதால்!

திருக்கோட்டியூருக்கு இவ்வளவு சிறப்பா, இல்லை இன்னும் இருக்கிறதா?

- திருக்கோட்டியூர் வைபவம் தொடரும்!

1 கருத்துகள்:

Rangan Devarajan said...

அன்பர்களே

இந்தப் பதிவு, மாதவிப் பந்தலில் முன்னரே அடியேனால் எழுதப் பட்டது. இதற்கான Comments அங்கு உள்ளன.

அங்கு சென்றால், தங்கள் எண்ணங்களுடன், மற்ற அடியவர்களின் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.



  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP