Thursday, May 13, 2010

மறங்கொள் இரணியன்


ம்பராமாயணம், யுத்த காண்டத்தில் ஒரு காட்சி ...

இடம்: ராவணன் அரண்மனை
காலம்: அவனுடைய கெட்ட காலம்


ராவணன்:
மந்திரிகளே! நாம் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்யலாம்!

மகோதரன்: குரங்குகளுடைய சேட்டைகளை நிறுத்துவதற்காக மந்திராலோசனை வேண்டுமோ?

வச்சிரதந்தன்: இப்பொழுதே பூமியில் உள்ள எல்லாக் குரங்குகளையும் கொன்று தின்ன உத்தரவிடுங்கள்.

துன்முகன்: யாராவது தம் உணவுப் பொருட்களிடம் பயப்படுவார்களா?

மகா பார்சுவன்: குரங்குக்கு உதவிய அக்னியை நீங்கள் அன்றே எரித்திருக்க வேண்டும்.

தூமிராட்சன்: அல்பமாக இருந்தாலும், சண்டையிட்டு, கொன்று தின்று விடுவோம். வேறு வழியில்லை.

கும்பகர்ணன்: சீதையை அபகரித்தது தவறு. உனக்குப் பல மனைவிகள் இருந்தும், இன்னொருவன் மனைவியின் அடிகளில் பல முறை வீழ்ந்தும், அவள் மறுப்பதும் உனக்கு அழகல்ல. இருந்தாலும், சண்டை செய்வதே இப்பொழுது வீரர்களுடைய செயல்.

இந்திரஜித்: நாங்களே சென்று கொன்று வருவோம். அந்தக் குரங்கை நான் ஏற்கனவே பிடித்தவன் தானே!

விபீடணன்: உனக்கு முன்னால், உன்னையும் விட வலிமையான இரணியாட்சனும், அவனையும் விட மிக வலிமையான இரணியகசிபுவும், திருமால் சினத்தால் தமது சுற்றத்தாருடன் இறந்தனர். அதைக் கேள்!

(இரணிய வதைப் படலத்தின் 170 கவிகளால் பிரகலாத சரித்திரத்தை, அழகாக விவரிக்கின்றான்)

விபீடணன் (கடைசியில்): இப்படிப் பட்ட வலிமையுடைய இரணியனே திருமாலால் எளிதாக அழிக்கப்பட்டான்! நீ எம்மாத்திரம்? இராமனாக வந்துள்ள திருமால் உன்னை அழிப்பது நிச்சயம். நீ உயிர் பிழைக்க வேண்டுமென்றால், சீதையை இராமனிடம் மீண்டும் சேர்த்து விட்டு அவரிடம் சரணடைந்து விடு!

கம்பர், இங்கு விபீடணன் மூலம் வர்ணித்த இரணியனின் வீரம், நம் கற்பனைக்கு எட்டுமா?
***



ம்பர், 11 கவிகளால் (133-143) இரணியனுடைய அபரிமிதமான வலிமையையும், அவனால் தேவர்களும், மனிதர்களும் பட்ட துன்பங்களையும் வர்ணிக்கின்றார்.

இவற்றை முழுவதும் விளக்கினால், நரசிம்மரில் இருந்து முழுவதும் ராமருக்குத் தாவ நேரிடலாம் என்ற பயத்தினால், ’இரணியன் Top 10' மட்டும் குறிப்பிட்டுள்ளேன்:

பாழி வன்தடம் திசை சுமந்து ஓங்கிய பணைக்கைப்
பூழை வன் கரி இரண்டு, இரு கைக்கொடு பொருத்தும்;

ஆழம் காணுதற்கு அரியவா அகன்ற பேராழி

ஏழும், தன் இரு தாள் அள, எனத் தோன்றும்.
(133)

10. Exercise - யானைகளை இழுத்து மோத விடுவது (கரி ... பொருத்தும்)!
9. Olympics - கடல் தாண்டுவது (ஆழி ஏழும் ... தோன்றும்)!

'வண்டல் தெண்திரை ஆற்று நீர் சில', என்று மருவான்;
'கொண்டல் கொண்ட நீர் குளிர்ப்பில' என்று, அவை குடையான்;

'பண்டைத் தெண்திரைப் பரவை நீர் உவர்' என்று படியான்;

அண்டத்தைப் பொதுத்து, அப்புறத்து அப்பினால் ஆடும்.
(134)

8. Bathtub/Shower - அண்டத்தில் உள்ள கடல் நீர் (அண்டத்தைப் ... ஆடும்)!

(இதை, வட மொழியில் ஆவரண ஜலம் என்பர்)

மரபின் மாப்பெரும் புறக்கடல் மஞ்சனம் மருவி,
அரவின் நாட்டிடை மகளிரோடு இன்னமுது அருந்தி,

பரவும் இந்திரன் பதியிடைப் பகல் பொழுது அகற்றி,

இரவின் ஓலக்கம் நான்முகன் உலகத்துள் இருக்கும்.
(135)

7. Party - நாக லோக மகளிர் (அரவின் .. அருந்தி)!
6. Entertainment - தேவ லோக ஆடல், பாடல் (இந்திரன் ... அகற்றி)!
5. Bedroom - பிரம்ம லோகம் (இரவின் ... நான்முகன் ... இருக்கும்)!

நிலனும் நீரும் வெங்கனலொடு காலுமாய், நிமிர்ந்த
தலனுள் நீடிய அவற்றினை, தலைவரை மாற்றி,

உலவும் காற்றொடு கடவுளர் பிறருமாய், உலகின்

வலியும், செய்கையும், வருணன் தன் கருமமும் ஆற்றும்.
(137)

4. Hobbies - பஞ்ச பூதங்களின் செயல்கள் (... கருமமும் ஆற்றும்)!

தாமரைத் தடம் கண்ணினான் பேர்; அவை தவிர
நாமம் தன்னதே உலகங்கள் யாவையும் நவில;
தூம வெங்கனல் அந்தணர் முதலினர் சொரிந்த
ஓம வேள்வி(அ)வயின் இமையவர் பேறெலாம் உண்ணும்.
(138)
 
3. Food - யாகங்களில் வரும் அவிர் பாகம் (வேள்வி ... உண்ணும்)

பண்டு வானவர் தானவர் யாவரும் பற்றி,
தெண் திரைக்கடல் கடை தர வலியது தேடிக்

கொண்ட மத்தினை, கொற்றத் தன் குலவு தோட்கு அமைந்த

தண்டு எனக் கொளல் உற்று; 'அது நொய்து', எனத் தவிர்த்தான்.
(141)

2. Dumbells - மந்திர மலை (மத்தினை ... கொளல் ... தவிர்த்தான்)!

மண்டலம் தரும் கதிரவன் வந்து போய் மறையும்
எண் தலத் தொடற்கு அரியன தடவரை இரண்டும்,

கண் தலம் பசும் பொன்னவன் முன்னவன் காதில்

குண்டலங்கள்; மற்று என், இனிப் பெரு வலி கூறல்?
(142)

1. Earrings - இரு பெரு மலைகள் (தடவரை இரண்டும் ... காதில் குண்டலங்கள்)!

அவன் வலிமையைப் பற்றி இனிக் கூறவும் வேண்டுமோ (மற்று ... கூறல்)?

(கவிஞனின் கற்பனை வளத்திற்கு உதாரணமாக, இலக்கிய ஆராய்ச்சிப் புத்தகங்களிலும், பாடப் புத்தகங்களிலும், இரணிய வதைப் படலம் கூறப்படுகின்றது)

சரி, மூல ராமாயணமான வால்மீகி ராமாயணத்தில் நரசிம்மர் வருகிறாரா?

***

வா
ல்மீகி ராமாயணம், யுத்த காண்டத்தில் ஒரு காட்சி:

(ராவணனிடம் கோபித்துக் கொண்டு, விபீடணன் தன் நான்கு மந்திரிகளுடன் ராமன் இருக்குமிடம் வருகிறான். சுக்ரீவனும் மற்ற வீரர்களும், போரிடத் தயாராகின்றனர்)



விபீடணன் (எல்லோருக்கும் கேட்கும்படி சத்தமாக):
ராமனிடம் சரணடைய வந்துள்ளோம்.

(சுக்ரீவன், ராமனிடம் ஓடிச் செல்கிறான்)

சுக்ரீவன்:
பிரபோ! விபீடணன் எதிரியின் பலத்தைச் சோதிக்க வந்திருக்கிறான். இவனை நம்மிடம் சேர்க்க வேண்டாம்.

ராமன் (மற்ற மந்திரிகளிடம்): நீங்கள் சுக்ரீவன் சொன்னதைக் கேட்டீர்கள் அல்லவா? உங்கள் எண்ணம் என்ன?

அங்கதன்: அவனைப் பரீட்சித்துப் பார்த்தே சேர்க்க வேண்டும். அவன் நல்லவனாக இருந்தால் சேர்க்கலாம்.

ஜாம்பவான்: இவனிடத்தில் நாம் சந்தேகப் படவேண்டியது நியாயமே.

மைந்தன் (மயிந்தன்): கேள்விகள் கேட்டுப் பரீட்சித்துப் பாருங்கள். இவன் நல்லவனாக இருந்து, இவனை நாம் விட்டு விட்டால், ஒரு மித்திரனை இழந்து விடுவோம்.

(’கழுவும் நீரில் நழுவும் மீன்கள்’ என்பதற்கு இவர்கள் தான் உதாரணமோ?)

இலக்குவன்: அண்ணா! இவன் வந்த காரணம் பற்றி எனக்குச் சந்தேகம் உள்ளது.

அனுமன் (ராமனிடம்): தங்களுக்குத் தெரியாததல்ல. இருந்தும் என்னை ஒரு பொருட்டாக மதித்துப் பேசும்படி கட்டளை இட்டதால் பேசுகிறேன். இவனை இப்படிப் பரீட்சிப்பது உசிதமல்ல. (விபீடணனுடைய நல்ல குணங்களைச் சொல்லி), சந்தேகப் படுவதும் தவறு. இவன் நேர்மையாகப் பேசுபவன். அசுரனாக இருந்தாலும், யோக்கியன். எனவே இவனைச் சேர்க்கலாம். தங்கள் கட்டளை என்ன?

(அனுமன் மற்ற மூன்று மந்திரிகளையும் மறைமுகமாகக் கண்டித்ததால், அவர்கள் நெளிகின்றனர் )

ராமன்: என்னை வந்து அடைந்தவனை நான் ஒருபோதும் கைவிடுவது இல்லை.

சுக்ரீவன்: இவன் நன்றியற்றவன். தமையனைக் கைவிட்டு இங்கு வந்தவன், பின்னால் நம்மையும் கைவிடலாம்.

ராமன்: ராவணன், நல்லவனான விபீடணனிடம் கோபப் படுவது நம்பக் கூடியதே. மேலும், அசுரர்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்களே (பிரகலாதனைச் சொல்கிறாரோ)?

சுக்ரீவன்: தாங்கள் இவனிடத்தில் பொறுமை காட்டுவது தவறு. இப்பொழுதே திருப்பி அனுப்பி விடுங்கள்.

(ராமனிடத்தில் உள்ள அன்பினால், கோபம் கொள்கிறான் சுக்ரீவன்)

ராமன் (அவனுக்கு புத்தி சொல்ல நினைத்து): வானர அரசனே! இவன் கெட்ட எண்ணத்துடனேயே வந்து இருக்கட்டும். இவனால் என்னை என்ன செய்ய முடியும்? (யு.கா.ஸ - 18.240-244)



ராமன் (மீண்டும்): நீயும் உன் படைகளும், ஏதோ என்னை ஆபத்திலிருந்து காத்துக் கொண்டு இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களைக் கொஞ்சம் கூடச் சிரமப் படுத்தாமல், பூமியில் உள்ள அரக்கர்களையும், தானவர்களையும், பிசாசுகளையும், மற்ற கெட்ட பிராணிகளையும், நினைத்த மாத்திரத்திலேயே விரலின் நுனியால் நாசம் செய்வேன் என்று நீ அறி! அஸ்திர, சஸ்திரங்கள் வேண்டாம். கையில் உள்ள மற்ற விரல்களின் உதவியும் வேண்டாம். ஒரு விரலிலும், அதில் உள்ள மற்ற கணுக்களும் வேண்டாம். நுனி ஒன்றே போதும்! (யு.கா.ஸ - 18.245-255)

(அனைவரும், விபீடணனை அழைத்து வரச் செல்கின்றனர்)

(சர்வேஸ்வரன் தன்னையே புகழ்ந்து கொள்வது சரியா எனில், நடந்த உண்மையை அப்படியே சொல்வது தற்புகழ்ச்சி ஆகாது என்பர் பெரியோர். நரசிம்ம அவதாரத்தில் இது தானே நடந்தது?)

நரசிம்மாவதாரத்தைப் பற்றி வால்மீகி ராமாயணத்தில் வேறு எங்கும் கூறப்படவில்லை.

(பல அறிஞர்கள், இராமகாதையில் நரசிம்மாவதாரமும், இரணிய வதமும் வருவதற்குக் காரணமே இல்லை என்பர். இருந்தும், இந்த நரசிம்மம் தானே சிரித்து, ராமாவதாரத்தை அரங்கனூரில் அரங்கேற்றி வைத்தது?)

(அடியேனின் எண்ணம் - வால்மீகி கோடு காண்பித்தார்; கம்பர் ரோடு போட்டார். இதில் தவறேதும் இல்லையே? மேலும், நரசிம்மனே 'சரி' என்று கூறியதில் நாம் தவறு காணலாமா?)

மீண்டும் ஆழ்வார் பாசுரத்துக்குத் தாவுவோமா?

***

ன்ன? 'மறங்கொள் இரணியன்' என்பது சரிதானே?

பெரியாழ்வார் உண்மையில் இரணியனையா புகழ்ந்தார்?

'இந்தக் கண்ணன் தான் இரணியனின் மார்பை அன்று கிழித்தான்' என்பதால், நரசிம்மன் வலிமையை மட்டும் சொல்கிறாரோ?

ஒருவேளை 'கண்ணனே நரசிம்மன்!' என்றும் சொல்கிறாரோ?

இந்த நரசிம்மனின் வலிமைக்கு, நம் வணக்கங்கள்.

... நரசிம்மர் மீண்டும் வருவார்

1 கருத்துகள்:

Rangan Devarajan said...

அன்பர்களே

இந்தப் பதிவு, மாதவிப் பந்தலில் முன்னரே அடியேனால் எழுதப் பட்டது. இதற்கான Comments அங்கு உள்ளன.

அங்கு சென்றால், தங்கள் எண்ணங்களுடன், மற்ற அடியவர்களின் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.



  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP